
இதுக்கும் இந்தியர்கள்தான் காரணம்
அமெரிக்காவின் எத்தனையோ வளர்ச்சிக்கு எப்படி இந்தியர்களும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளனரோ அதேபோல அங்கு கிரிக்கெட் பிரபலமாகவும் இந்தியர்கள்தான் கை கொடுத்துள்ளனர். அதிகரித்து வரும் இந்தியர்களின் எண்ணிக்கையால் அமெரிக்காவில் கிரிக்கெட்டும் தற்போது பிரபலமாகி வருகிறது.

கரீபியர்களும் காரணம்
அதேபோல கரீபியர்கள் அதாவது மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்தவர்களும் கூட கிரிக்கெட் போட்டிக்கு கணிசமான முக்கியத்துவம் தருவதால் அமெரிக்கர்களிடையே கிரிக்கெட் பிரபலமாகி வருகிறது.

நியூயார்க் பள்ளியில் அதிகாரப்பூர்வ விளையாட்டு
நியூயார்க் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கிரிக்கெட்தான் அதிகாரப்பூர்வ விளையாட்டாக உள்ளதாம். இதுவே பெரிய ஆச்சரியமான செய்திதான்.

3 கோடி ரசிகர்கள்
அமெரிக்காவில் கிரிக்கெட் ஆட்டத்துக்கு 3 கோடி ரசிகர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவும் ஒரு பெரிய ஆச்சரியமான விஷயம்தான்.

அட ஐபிஎல் போட்டிகளும் பிரபலமப்பா...
மேலும் இந்த ஆண்டு நடந்த இந்தியாவின் ஐபிஎல் போட்டிகளை இங்கு டிவி மூலம் நேரடியாகவும் ஒளிபரப்பு செய்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அடிமைக் காலத்திலிருந்தே ஆடுறாங்களாமே...
அமெரிக்கா அடிமைப்பட்டிருந்த காலத்திலிருந்தே இங்கு கிரிக்கெட் இருப்பதாக ஒரு தகவல் நம்மை வியப்படைய வைக்கிறது.

ஹிஸ்டரி ஆப் கிரிக்கெட் இன் இமெரிக்காஸ்
இந்தத் தகவல்கள் எல்லாம் கனக்டிகட்டைச் சேர்ந்த ஜெயேஷ் படேல் என்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் எழுதியுள்ள Flannels on the Sward, History of Cricket in Americas என்ற நூலில் கூறியுள்ளார்.

பிலடெல்பியா, ஹார்ட் போர்ட், நியூயார்க், பாஸ்டன்
1700களில் பாஸ்டன், பிலடெல்பியா, ஹார்ட்போர்ட், நியூயார்க ஆகிய நகரங்களில் கிரிக்கெட் ஆட்டம் விளையாடப்பட்டுள்ளது. இதற்கு சான்றுகள், ஆவணங்கள் உள்ளன என்று இந்த நூலில் படேல் கூறியுள்ளார்.

விக்கெட்
கிரிக்கெட்டுக்கு முந்தைய விக்கெட் என்ற ஆட்டம், கனக்டிகட், பிரிஸ்டல் ஆகிய நகரங்களில் விளையாடப்பட்டுள்ளது.

விக்கெட்டும், இஎஸ்பிஎன்னும்
இன்று உலகின் முன்னணி கிரிக்கெட் சானலாக இஎஸ்பிஎன் உள்ளது. இந்த டிவி நிறுவனத்தின் தலைமையகம் பிரிஸ்டல்தான். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்!

22 மாகாணங்களில்
1800களில் அமெரிக்காவின் 22 மாகாணங்களில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. 1000 கிளப்கள் வரை கிரிக்கெட்டுக்காகவே இருந்துள்ளன.

பிலடெல்பியா பிட்ச்!
இதில் பிலடெல்பியாதான் கிரிக்கெட்டில் பிரபலமான ஊராகவும் திகழ்ந்துள்ளது. இங்கு மட்டும் மெரியான், ஜெர்மன்டவுன், பிலடெல்பியா கிளப் என 3 பிரபலமான கிரிக்கெட் கிளப்கள் இருந்துள்ளன. இப்போதும் கூட பிலடெல்பியாவில் கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்று வருடா வருடம் நடந்து வருகிறது.

உள்நாட்டுப் போருக்குப் பின் மாற்றம்
அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் மூண்ட பின்னர் கிரிக்கெட் காலியாகி விட்டது. அதற்குப் பதில் பேஸ்பால் பிரபலமாகி விட்டது. கிரிக்கெட் அடியோடு நின்று போய் விட்டது.

பேஸ்பால்தான் தேசிய விளையாட்டு
கிரிக்கெட் வெளியிலிருந்து வந்தது என்பதால், பேஸ்பால்தான் தேசிய விளையாட்டாக அமெரிக்காவில் மாறிப் போனது. தேசப்பற்றை வெளிப்படுத்தும் விளையாட்டாகவும் அது மாறியது.

நாள் பூரா யார் விளையாடுவா
மேலும் பேஸ்பால் என்பது சில மணி நேர விளையாட்டு. அதுவே கிரிக்கெட் என்றால் ஒரு நாள் முழுக்க விளையாட வேண்டும் என்பதால் சோம்பேறிகளின் விளையாட்டு என்பது போல பார்க்க ஆரம்பித்து விட்டனர் அமெரிக்கர்கள்.

ஆஸ்திரேலியாவை வென்ற பிலடெல்பியா
உண்மையில் பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் அணி அக்காலத்தில் வலுவான அணியாக இருந்துள்ளது. 1912ம் ஆண்டு நடந்த ஒரு போட்டியில் அப்போது வலுவாக இருந்த ஆஸ்திரேலியா அணியையே பிலடெல்பியா வீரர்கள் தோற்கடித்து அசத்தியுள்ளனர்.

சூப்பர் பவுலர் பார்ட் கிங்
மேலும் பார்ட் கிங் என்று ஒரு பந்து வீச்சாளர் அப்போது அமெரிக்காவைக் கலக்கியுள்ளார். அவர் அருமையான ஸ்விங் பவுலராகவும் இருந்துள்ளார். இவர் குறித்து கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் விஸ்டனே குறிப்பிட்டுள்ளது.

முதல் உலகப் போருக்குப் பின்னர்
முதல் உலகப் போருக்குப் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்காவி்ல் கிரிக்கெட் செல்வாக்கை இழந்தது. பேஸ்பால் முழுமையாக அந்த இடத்தைப் பிடித்து விட்டது. அதன் பிறகு கிரிக்கெட் தலையெடுக்கவே இல்லை.
இப்போது இந்தியர்களின் புண்ணியத்தால் அமெரிக்காவில் மீண்டும் கிரிக்கெட் தலை தூக்கும் "அபாயம்" எழுந்துள்ளது!


Click it and Unblock the Notifications











