சிட்னி: இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான "ஆஷஸ்" டெஸ்ட் தொடர், கிரிக்கெட்டின் முதன்மை தொடராக உள்ளது. ஆஷஸ் தொடரில் பேட்ஸ்மேன்கள் அடிக்கடி கவனத்தை ஈர்த்தாலும், சில நேரங்களில் பந்துவீச்சாளர்கள் மறக்க முடியாத சரித்திரங்களை எழுதி இருக்கிறார்கள். 1956 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கதற விட்டு, இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் அந்த நம்ப முடியாத அதிசயத்தை செய்தார்.
1882 இல் தொடங்கிய ஆஷஸ் வரலாற்று டெஸ்ட் தொடரில், 1956 ஆம் ஆண்டுத் தொடர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்தது. அந்தத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு, இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட்டியில், வெற்றி பெற வேண்டும் என்ற மன உறுதியுடன் இரு அணிகளும் களமிறங்கின.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, பீட்டர் ரிச்சர்ட்சன் மற்றும் டேவிட் ஷெப்பர்ட் ஆகியோரின் அபாரமான சதங்களின் உதவியுடன், ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்து 459 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை எட்டியது. இரண்டாம் நாள், ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறியது. பேட்ஸ்மேன்களுக்கு கடினமாகவும், சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சொர்க்கமாகவும் மாறிய அந்த ஆடுகளத்தில் ஜிம் லேக்கர் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார்.
ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில், காலின் மெக்டொனால்ட் மற்றும் நீல் ஹார்வி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி சரிவுக்கு வித்திட்டார். விரைவிலேயே தனது ஐந்து விக்கெட் ஹாலை நிறைவு செய்த லேக்கர், இயன் கிரேக், கீத் மில்லர் மற்றும் கென் மெக்கே ஆகியோரையும் வெளியேற்றினார்.
ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் திணறிக் கொண்டிருந்த நிலையில், லேக்கரின் பந்துவீச்சு இன்னும் உக்கிரமடைந்தது. சீரான துல்லியத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளைச் சாய்த்த அவர், வெறும் 9 ரன்களுக்குள் மேலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆஸ்திரேலியா வெறும் 84 ரன்களுக்குச் சுருண்டது. ஜிம் லேக்கர் தனி ஆளாக 37 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
முதல் இன்னிங்ஸில் ஏற்பட்ட அவமானத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா ஃபாலோ-ஆன் செய்ய நிர்பந்திக்கப்பட்டது. தொடரைக் காப்பாற்ற அதுவே கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனால், ஜிம் லேக்கரின் ஆட்டம் அப்போதும் முடிவுக்கு வரவில்லை. கனமழை மற்றும் லேக்கரின் மேஜிக், ஆஸ்திரேலியாவை மீண்டும் நிலைகுலையச் செய்தது.
மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும், ஜிம் லேக்கர் இரண்டு விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தினார். கனமழைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது, விட்ட இடத்திலிருந்து தனது விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். இயன் கிரேக், கீத் மில்லர் மற்றும் கென் மெக்கே ஆகியோரை மீண்டும் வெளியேற்றி, இந்த இன்னிங்ஸிலும் ஐந்து விக்கெட் ஹாலை நிறைவு செய்தார்.
அதன்பிறகு, ராப் ஆர்ச்சர் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார். காயத்தால் வெளியேறியிருந்த மெக்டொனால்ட் மீண்டும் களத்திற்கு வந்து, ஒரு தனி நபராகப் போராடி 89 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு அச்சுறுத்தலாக விளங்கிய அவரையும் லேக்கரே வீழ்த்தினார். இறுதியில், லேக்கர் அந்த இன்னிங்ஸில் வெறும் 53 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி, கிரிக்கெட் உலகில் யாரும் கனவிலும் நினைத்துப் பார்க்காத சாதனையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 170 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து, ஜிம் லேக்கர் 90 ரன்களுக்கு 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மான்செஸ்டர் மைதானம் அந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்குச் சாட்சியாக நின்றது. கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதே ஒரு பெரிய சாதனையாகக் கருதப்படும் நிலையில், ஒரு இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 19 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது என்பது நம்ப முடியாததாக தோன்றலாம். ஆனால், 1956 இல், இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேக்கர் அதை செய்து காட்டினார்.