ICC World Cup 2019: இந்த 4 அணிகளில் ஒரு அணிக்கு உலக கோப்பை.. எப்படி..? ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம்
லண்டன்:2019ம் ஆண்டு உலக கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசி லாந்து அல்லது போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து ஆகிய 4 அணிகளில் ஒன்றுக்கு தான் உலக கோப்பை கிடைக்கும் என்று வல்லுநர்கள் கூறி இருக்கின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிட்டத்தட்ட 2 மாதங்கள் விருந்து படைக்க இருக்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்க இன்னும் 2 நாட்களே பாக்கி. யாருக்கு கோப்பை என்று ரசிகர்கள் கோதாவில் குதித்து, விவாதித்து வருகின்றனர்.
நிச்சயம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் மிக திறமை வாய்ந்த அணிகள். ஆனாலும்... கோப்பை ஒருவருக்கு தான் கிடைக்கும். அந்த ஒரு கோப்பைக்காக முட்டி மோதும் அணிகளில் 4 அணிகளுக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் உள்ளன. அந்த அணிகளை பற்றிய ஒரு குறுக்குவெட்டு தோற்றத்தை பார்ப்போம்.

முழு பார்மில் இங்கி.
முதலில் இங்கிலாந்து... !! கடந்த முறை முதல் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் உலக கோப்பை நடைபெறுவதால் எக்கச்சக்க உள்ளூர் ரசிகர்கள். அதற்கேற்ப சமீப காலமாக அந்த அணியின் ஆட்டமும் மெச்சத்தகுந்தபடி இருக்கிறது. 35 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்து எதிரணியை திணறடித்து இருக்கின்றனர்.

மாறுமா வரலாறு?
சொல்லப்போனால்.. ஜாம்பவான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 480 ரன்களை குவித்து உலக சாதனை படைத்து அனைவரையும் தலை சுற்ற வைத்தது. இங்கிலாந்தின் சூழ்நிலையும் அந்த அணிக்கு சாதகமாக அமைந்திருப்பதால் முதல் முறையாக கோப்பையை வென்று பழைய கால வரலாற்றை மாற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்க்கலாம்.

நேர்மையானது
அடுத்து... நியூசிலாந்து...!! நேர்மையான அணி என்ற பெயருடன் ரசிகர்களை பெற்ற அணி. எப்போது சீறுவார்கள், எப்போது சொதப்புவார்கள் என்று இதுவரை கண்டே பிடிக்க முடியாது. சொந்த மண்ணில் கேப்டன் மெக்கல்லம் கடந்த உலக கோப்பையில் ஆடிய அதிரடி.. இந்த உலக கோப்பை வரை பேசு பொருளாகி விட்டது.

கலவையான அணி
அவர் ஓய்வு பெற்ற நிலையில், வில்லியம்சன் தலைமையில் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. அனுபவம், ஆல்ரவுண்டர்கள் என கலவையான அணியாக தற்போது இருப்பதால் அவ்வளவு எளிதாக இந்த அணியை ஒதுக்கி வைக்க முடியாது.

நடப்புச் சாம்பியன் ஆஸி.
நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா...!! அவ்வளவு சுலபத்தில் எடை போட முடியாத அணி. ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய வார்னர், ஸ்மித் ஆகியோரின் வருகை அந்த அணிக்கு தெம்பை கொடுத்திருக்கிறது. அதிரடி வீரர் ஆரோன் பிஞ்ச் தலைமையில் அந்த அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

12ல் மகுடம்
அடுத்து மென் இன் ப்ளூ... இந்தியா...!! முந்தைய உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணிகளில் இந்தியா தான் பர்ஸ்ட். கடைசியாக விளையாடிய 13 தொடர்களில் 12ல் மகுடம் சூடி இருக்கிறது.

எதிர்பார்ப்புகள் அதிகம்
கேப்டன் கோலியின் ஆக்ரோஷ பேட்டிங், தல தோனியின் அனுபவம், புது முகங்களின் வரவு, வெளிநாட்டு தொடர்களிலும் வெற்றி என இந்தியாவின் உலக கோப்பை வாய்ப்புகளை பிரகாசப்படுத்தி இருக்கிறது. கோப்பையுடன் ஊர் திரும்புவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி மீது எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது.


Click it and Unblock the Notifications