துபாய்: 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இந்திய அணி இதற்கு முன்பு ஒருமுறை அதிகாரப்பூர்வமாகவே ஒரு முழு ஆசிய கோப்பைத் தொடரையும் புறக்கணித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது 1986-ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது ஆசிய கோப்பைத் தொடர்.
ஆசிய கோப்பையின் முதல் தொடர் 1984-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. இதையடுத்து, 1986-ஆம் ஆண்டு இரண்டாவது ஆசிய கோப்பைத் தொடர் இலங்கையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்தியா, தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இருந்தது.

ஆனால், அப்போது இலங்கையுடனான இந்தியாவின் கிரிக்கெட் உறவுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. 1985-ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, நடுவர்களின் முடிவுகள் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. அந்தத் தொடர் முழுவதும் இரு அணி வீரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும், மனக்கசப்புகளும் ஏற்பட்டன. இந்த கசப்பான அனுபவம், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த கிரிக்கெட் ரீதியான பிரச்சினை ஒருபுறமிருக்க, அப்போது இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் சூழலும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. வீரர்களின் பாதுகாப்பு மற்றும் மோசமான கிரிக்கெட் உறவுகளைக் காரணம் காட்டி, 1986 ஆசிய கோப்பைத் தொடரில் பங்கேற்க வேண்டாம் என பிசிசிஐ-க்கு இந்திய அரசு உத்தரவிட்டது. இதனால், நடப்பு சாம்பியனாக இருந்தபோதிலும், இந்தியா அந்தத் தொடரிலிருந்து விலகியது.
இந்தியா 1986 ஆசியக் கோப்பை தொடரிலிருந்து விலகியதால், அந்த இடத்திற்கு ஒரு புதிய அணி அழைக்கப்பட்டது. அதுதான் வங்கதேசம். அதுவரை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் கூட விளையாடாத வங்கதேச அணிக்கு, ஆசிய கோப்பை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. 1986 ஆசிய கோப்பையின் இரண்டாவது போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் தனது முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானது. அந்தப் போட்டியில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம், பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.
இலங்கைக்கு எதிரான தனது அடுத்த போட்டியிலும் தோல்வியடைந்தாலும், அந்தத் தொடர் வங்கதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி கோப்பையை வென்றது.
வங்கதேசம் ஆசிய கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக மாறியதுடன், 1988-ஆம் ஆண்டு நடந்த அடுத்த ஆசிய கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பையும் பெற்றது. இந்தத் தொடரில் இந்திய அணி மீண்டும் களமிறங்கியது. இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி, இரண்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இதில் மற்றொரு சுவாரசியமாக 1990-ஆம் ஆண்டு இந்தியாவில் முதல்முறையாக ஆசிய கோப்பை நடத்தப்பட்டபோது, அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் அந்தத் தொடரைப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.