ஆர்ச்சரின் பந்துவீச்சை துவம்சம் செய்த 15 வயது சிறுவன்: சங்கக்காரா பகிர்ந்த பிரமிக்க வைக்கும் உண்மை!
பெல்ஃபாஸ்ட்: வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக இன்னும் அறிமுகமாகவில்லை என்றாலும், உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சூழலில் வைபவ் வளர்ச்சி குறித்து ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குமார் சங்கக்காரா, 15 வயதே ஆன இந்த இளம் பேட்டரின் அச்சமற்ற அணுகுமுறையையும், அசாத்திய தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தும் சில சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா - அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, ஸ்கை ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் (Sky Sports Cricket) நேரலையில் பேசிய சங்கக்காரா, களமிறங்குவதற்கு முன்பாகவே தங்களது வெற்றியை சூர்யவன்ஷி எவ்வாறு நம்பிக்கையுடன் கணிப்பார் என்பதை நினைவு கூர்ந்தார். மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி முகாமின் போது, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு நட்சத்திரமான ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சை சூர்யவன்ஷி எவ்வித பயமுமின்றி எதிர்கொண்டு அனைவரையும் பிரமிக்க வைத்த சம்பவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இது குறித்து பேசிய சங்கக்காரா "இந்த ஆண்டு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் விளையாடிக் கொண்டிருந்தோம். தொடரில் நீடிப்பதற்காக நாங்கள் 220 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்ட வேண்டியிருந்தது. நாங்கள் முதலில் பந்துவீசினோம். அப்போது வைபவ் என்னிடம் வந்து, கண்ணடித்துவிட்டு, 'கோச், கவலைப்படாதீர்கள். நாம் இலக்கை எட்டி விடுவோம்' என்றார்."
"அதன் பின்னர் டிரஸ்ஸிங் ரூமிற்குச் சென்ற அவர், டொனோவன் ஃபெரைரா மற்றும் லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் ஆகியோரிடம், 'நீங்கள் இருவரும் கவனித்துக் கொள்ளுங்கள். நான் 13 சிக்ஸர்களை அடிக்கப் போகிறேன். நான் அதைச் செய்தவுடன், மீதமுள்ள ஆட்டத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்' என்றார். இறுதியாக அவர் அந்த போட்டியில் 10 சிக்ஸர்களை அடித்தார்.
அவர் 5 அல்லது 6 சிக்ஸர்களை அடித்திருந்தபோது, டொனோவனும் பிரிட்டோரியஸும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, 'அவன் என்ன பேசிவிட்டுப் போனான்?' என்று நினைத்தனர். ஆனால், இந்த சிறுவன் அதை நிஜமாகவே செய்துவிடுவான் என்பதை உணர்ந்தவுடன் அவர்கள் சிக்ஸர்களை எண்ணத் தொடங்கினர். அவரிடம் உள்ள தன்னம்பிக்கையின் அளவு அத்தகையது" என்று சங்கக்காரா கூறினார்.
மேலும், குவஹாத்தியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சி முகாமில் சூர்யவன்ஷியை முதன்முதலில் பார்த்த தனது அனுபவத்தையும் சங்கக்காரா பகிர்ந்து கொண்டார். "நான் இரண்டு வார பயிற்சி முகாமிற்காக குவஹாத்தி வந்திருந்தபோது வைபவை முதன்முதலில் பார்த்தேன். அங்கு ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் புதிய பந்தில் வீசும் ஒரு சிறிய வலைப்பயிற்சி பகுதி இருந்தது. அங்கு பேட்டிங் செய்யப் போவதற்கு யாரும் தயாராக இல்லை.
அப்போது வைபவ் அங்கு வந்து, 'நான் பேட்டிங் செய்கிறேன்' என்று சாதாரணமாகக் கூறி களம் புகுந்தார். பந்து அவனது பேட்டின் நடுப்பகுதியில் படும்போதெல்லாம் அது துப்பாக்கி குண்டு வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது. அவர் ஆர்ச்சரையும், சந்தீப் சர்மாவையும் மிக துணிச்சலாக எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் ஆர்ச்சர் பந்துவீசுவதை நிறுத்திவிட்டு சிரித்தே விட்டார். ஏனெனில் ஆர்ச்சர் மிகவும் வேகமாக பந்துவீசிக் கொண்டிருந்தார், ஆனால் இந்த 14 வயது சிறுவனோ அவரது பந்துவீச்சை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் மிக எளிதாக கையாண்டார்," என்று அவர் தெரிவித்தார்.
சிறப்பான ஐபிஎல் 2026 சீசன்
சூர்யவன்ஷி ஐபிஎல் 2026 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தார். இந்த இடதுகை பேட்டர் 776 ரன்களுடன் தொடரின் அதிக ரன் குவித்த வீரராக உருவெடுத்து ஆரஞ்சு கேப் (Orange Cap), மதிப்புமிக்க வீரர் (MVP), சிறந்த இளம் வீரர் (Emerging Player), சூப்பர் ஸ்டிரைக்கர் மற்றும் சூப்பர் சிக்ஸஸ் ஆகிய விருதுகளை வென்று அசத்தினார். எலிமினேட்டர் போட்டியில் 29 பந்துகளில் 97 ரன்கள் மற்றும் குவாலிஃபையர் 2 இல் சதம் விளாசிய அவரது அதிரடியான அணுகுமுறை, உலக கிரிக்கெட்டின் மிகச்சிறந்த இளம் திறமைகளில் ஒருவராக அவரை நிலைநிறுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

