
சர்தார் வல்லபாய் படேல் மைதானம்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் சர்வதேச அளவில் மிகவும் பெரியது. அந்த மைதானத்திற்கு சவால் விடும் வகையில் தற்போது இந்தியாவின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது சர்தார் வல்லபாய் படேல் மைதானம். மோதெரா மைதானம் என்றும் அழைக்கப்படும் இந்த மைதானம் இந்த 2020ம் ஆண்டின் பெருமை என்றும் கூறலாம்

போட்டிகளை கண்டு ரசிக்கலாம்
இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமர்ந்து அதில் நடக்கும் போட்டிகளை கண்டு ரசிக்கலாம். மெல்போர்னில் ஒரே நேரத்தில் 95,000 பார்வையாளர்கள் மட்டுமே அமர முடியும். உலகின் மிகப்பெரிய 2வது மைதானம் என்ற பெருமையும் மோதெரா மைதானத்திற்கு கிடைத்துள்ளது.

உலகறிந்த சிறப்பு
உலகின் மிகப்பெரிய மைதானம் வடகொரியாவின் ரன்கிராடோ மே டே மைதானம். இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் இந்தியா வந்த டிரம்ப் இந்த மைதானத்திற்கு விசிட் செய்தது மைதானத்தின் சிறப்பை உலகறிய செய்துள்ளது. முன்னதாக 49,000 பேர்வரை அமரக்கூடிய வகையில் இந்த மைதானம் இருந்தது. இதுதான் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு அம்சங்கள்
63 ஏக்கர் நிலத்தில் இந்த மைதானம் தற்போது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. 1,10,000 இருக்கைகள், 76 கார்ப்பரேட் ஏசி அறைகள், கிளப் ஹவுஸ், நீச்சல் குளம், 2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மோடியின் கனவு
இங்கு கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட மற்ற போட்டிகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மோடியின் கனவாக இந்த மைதானம் உள்ளது. இதற்கான காரணமாக அவர் இருந்துள்ளார். கடந்த 2016ல் பழைய மைதானம் முழுமையாக இடிக்கப்பட்டு 800 கோடி ரூபாயில் தற்போது இந்த மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கவாஸ்கர், கபில்தேவ் சாதனை
இந்த மைதானத்தில் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல வீரர்கள் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். கவாஸ்கர் தன்னுடைய 10,000 ரன்கள் சாதனையை பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு தான் பூர்த்தி செய்தார். கபில்தேவ் ஹாட்லியின் 431 விக்கெட்டுகள் சாதனையை இங்கு தான் முறியடித்தார்.

முதல் இரட்டைசதம்
சச்சின் டெண்டுல்கர் கடந்த 1999ல் நியூசிலாந்திற்கு எதிரான தன்னுடைய முதல் இரட்டை சதத்தை இங்குதான் பூர்த்தி செய்தார். இந்த மைதானத்தில் இதுவரை போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில், நேற்றைய தினம் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் பிசிசிஐ உறுப்பினர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து இங்கு பயிற்சி போட்டியில் விளையாடினர்.

மைதானத்தின் முதல் அரைசதம்
இந்த போட்டியில் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில், இந்த மைதானத்தில் முதல் அரைசதம் அடித்துள்ள வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. மேலும் வரும் பிப்ரவரியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணயினர், இந்த மைதானத்தில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











