
கணிசமாக 20 - 30 ரன்கள்
இதில், டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. முதலில், 120 ரன்களுக்குள் அந்த அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒருக்கட்டத்தில் அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் போது, 180 ரன்களை கூட எட்டமுடியாது என்றே கணிக்கப்பட்டது. ஆனால், களமிறங்கும் ஒவ்வொரு வீரரும் கணிசமாக 20 - 30 ரன்கள் அடித்துவிட்டு போக, அப்படி இப்படி என்று அந்த அணி 262 ரன்களை எட்டியது. கடைசி ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 19 ரன்களை குவித்தது அந்த அணி. அதுவும் புவனேஷ் குமார் ஓவரில்.

9 பவுண்டரிகள்
இதையடுத்து, இந்திய அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தவான் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, ப்ரித்வி ஆரம்பம் முதலேயே தனது வழக்கமான "அட்டாக்" மோடில் விளையாடத் தொடங்கினார். அவர் 24 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில், 9 பவுண்டரிகள் அடக்கம். பவர் பிளேயில் கொஞ்சமும் இரக்கம் காட்டாமல், சகட்டுமேனிக்கு விளாசினார். குறிப்பாக, ஃபேஸ் பவுலர்களை சரமாரியாக அடித்தார். பிறகு களமிறங்கிய இஷான் கிஷன் 42 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் தவான் 86 ரன்களுடன் களத்தில் நிற்க, இந்திய அணி 36.4வது ஓவரிலயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 263 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

ஷேவாக் மாதிரி ஆடுறார்
இந்நிலையில், இப்போட்டி குறித்தும், ப்ரித்வி ஷா பேட்டிங் குறித்தும் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் லெஜண்ட் ஸ்பின்னருமான முத்தையா முரளிதரன் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில், "பிருத்வி ஷாவைப் பொறுத்தவரை, அவர் ஒரு டெஸ்ட் வீரர் என்பதை விட, சிறந்த ஒரு நாள் மற்றும் டி 20 வீரர் என்பேன். ஏனெனில் அவர் விளையாடும் விதம், அது ஷேவாக் ஆட்டத்தை நினைவூட்டுகிறது. அவர் நிறைய ரிஸ்க் எடுத்து பந்துவீச்சாளர்களிடம் பிரஷரை ஏற்படுத்துகிறார். அவர் தொடக்கத்தில் நல்ல ஸ்கோர் அடித்தால், இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு கிடைத்துவிடும். அவருக்கு அப்படியொரு திறமை இருக்கிறது. பயமே அவரிடம் இல்லை. அவர் அவுட் ஆவதை பற்றியெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை.

இந்தியாவின் நன்மை
"போட்டிகளில் வெற்றிபெற இவரைப் போன்ற வீரர்கள் தேவைப்படுவதால், ப்ரித்வி ஷா இப்படி தொடர்ந்து அதிரடியாக விளையாடஇந்திய அணி ஊக்குவிக்க வேண்டும். அவர் மிகவும் ஆபத்தானவர். ஷிகர் சாதாரணமாக விளையாடலாம். அவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளதால், அவரை நான் நன்கு அறிவேன். எனவே அவர் சாதாரணமாக விளையாடலாம். பிருத்வி களத்தில் நின்றுவிட்டால், பந்துவீச்சை சேதப்படுத்தும் பணியை அவர் பார்த்துக் கொள்வார். இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை" என்று முரளிதரன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











