மும்பை: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடைபெற இருந்தது. அதற்காக அனைத்து உலக அணிகளும் தயாராகி வருகின்றன. அதே சமயம், வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரம் உச்சத்தை எட்டி உள்ளது. அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வேல்;வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்த நிச்சயமற்ற சூழ்நிலையில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பையை வங்கதேசத்தில் நடத்துவது கடினமானது என்ற முடிவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரை அண்டை நாடான இந்தியாவில் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக கலவரத்துக்கு நடுவே வங்கதேசத்தில் போட்டிகளை நடத்தி விடலாம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டது. ஆனால், நேற்று முன்னாள் வங்கதேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ராபே மொர்டாசாவின் வீடு கலவரக்காரர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும், வங்கதேச கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் பலரும் ஆளுங்கட்சியான ஆவாமி லீக் கட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள். எனவே, அவர்களில் பலர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் டி20 உலகக் கோப்பையை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக மாறி இருக்கிறது. இதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாற்று யோசனைகளை ஆலோசித்து வருகிறது. வங்கதேச நாட்டில் இருக்கும் சூழ்நிலையை ஒத்த நாடு ஒன்றில் தான் உலகக்கோப்பையை நடத்த வேண்டும் என்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திட்டவட்டமாக உள்ளது. ஏனெனில், அனைத்து இந்த தொடரில் பங்கேற்க உள்ள அணிகள் வங்கதேச சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து இருப்பார்கள். அதைக் கருத்தில், கொண்டு வங்கதேசத்தின் அண்டை நாடுகளான இந்தியா அல்லது இலங்கையில் உலகக் கோப்பை தொடரை நடத்துவது குறித்து சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது.
அக்டோபர் மாதத்தில் இலங்கையில் கடும் மழை பெய்ய கூடும் என்பதால் அதையும் கருத்தில் கொண்டுள்ளது. இந்தியாவில் நிறைய மைதானங்கள் உள்ளன. மேலும், பிசிசிஐ இரண்டு மாத காலத்திற்குள் உலகக் கோப்பைக்கான ஏற்பாடுகளை விரைவாக செய்யக்கூடிய செல்வாக்கு படைத்த அமைப்பாக உள்ளது.
எனவே, 2024 டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கக் கூடும். இதுவரை இந்திய மகளிர் அணி எந்த ஒரு உலகக் கோப்பையையும் வென்றதில்லை. ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் இதுவரை ஒரு முறை கூட வெல்லாத நிலையில் சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் இந்திய மகளிர் அணிக்கு அதிர்ஷ்டமாக மாறுமா?