இந்திய அணியில 10 வருஷமா விளையாடிக்கிட்டு இருக்கேன்.. இதைவிட பெரிய பெருமை இல்லை
துபாய் : இந்திய அணியில் கடந்த 10 ஆண்டுகளாக விளையாடி வருவதாகவும் இதைவிட சிறந்த பெருமை எதுவும் இல்லை என்றும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2010 அக்டோபர் 20ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒருநாள் போட்டியில் அவர் முதல்முறையாக களமிறங்கி விளையாடினார்.
தொடர்ந்து 136 ஒருநாள் போட்டிகளிலும் 34 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஷிகர் தவான் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஐபிஎல்லில் விளையாடி வருகிறார்.

136 ஒருநாள் போட்டிகள்
கடந்த 2010 அக்டோபர் 20ம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்று விளையாடினார் இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். தொடர்ந்து அவரது கால்கள் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய அணிக்காக 136 ஒருநாள் போட்டிகளை விளையாடி 5,688 ரன்களை குவித்துள்ளார்.

ஐபிஎல்லில் முதல் சதம்
அடுத்த ஆண்டிலேயே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 போட்டிகளிலும் விளையாடத் துவங்கிய ஷிகர் தவான், இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,315 ரன்களை குவித்துள்ளார். தற்போது ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிவரும் தவான், சமீபத்தில் சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை எடுத்துள்ளார்.

ஷிகர் தவான் மகிழ்ச்சி
இந்நிலையில் இன்று இந்திய அணிக்காக தான் விளையாட ஆரம்பித்து 10 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள ஷிகர் தவான், அதுகுறித்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகள் தனது நாட்டிற்காக விளையாடியது மிகச்சிறந்த பெருமை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைவிட பெருமை இல்லை
தன்னுடைய நாட்டிற்காக விளையாடியது மிகச்சிறந்த நினைவுகளை தந்துள்ளதாகவும் அது தனது வாழ்நாள் முழுவதும் தொடரும் என்றும் அதற்காக தான் பெருமை கொள்வதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதைவிட சிறந்த பெருமை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications