மும்பை: உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற விவாதம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால் முதல் 3 இடங்களில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள். ஆனால் 4வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒருவரே தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் 5வது இடத்தில் கேஎல் ராகுல், 6வது வீரராக ஹர்திக் பாண்டியா, 7வது வீரராக ஜடேஜா, 8வது வீரராக ஷர்துல் தாக்கூர் அல்லது அஸ்வின் ஆகியோர் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. பின்னர் குல்தீப், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் இடம்பெறவுள்ளனர். அந்த வகையில் பார்த்தால் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது எளிதல்ல.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் பேசுகையில், கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்திற்கு பின் வந்து சதம் விளாசி அசத்தி இருக்கிறார்கள். இந்திய அணிக்கு சிறந்த சமநிலையை ஹர்திக் பாண்டியா தான் வழங்கியுள்ளார். 6வது பவுலர் மாற்றும் 6வது பேட்ஸ்மேன் என்ற ரோலுக்கு சரியான வீரராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.
இதனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைப்பது கடினமான ஒன்று தான். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் காம்பினேஷனில் இடதுகை பேட்ஸ்மேனுக்கு இடம் கொடுக்க வேண்டுமென்றால் மட்டுமே இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல் ஃபினிஷராக மட்டுமே சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஹர்திக் பாண்டியா அல்லது ஜடேஜா ஆகிய வீரர்களில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வலைபயிற்சியின் போது சூர்யகுமார் யாதவ் பவுலிங் பயிற்சியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.