இமாலய சாதனை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் 2 தொடர்களில் இந்திய அணி வெற்றி கொண்டது. குறிப்பாக டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்து நாடு திரும்பியது.
சாத்தியப்படுத்திய இளம் அணி
இந்த தொடரில் முக்கிய மற்றும் முன்னணி இந்திய வீரர்கள் காயம் உள்ளிட்ட காரணங்களால் பங்கேற்க முடியாத நிலையில் இளம் வீரர்கள் அணியை வழிநடத்தி சிறப்பான வெற்றியை சாத்தியப்படுத்தினர். இதில் நடராஜனும் ஒருவர். நெட் பௌலராக ஆஸ்திரேலியா சென்ற இவர், 3 வடிவங்களிலும் அடுத்தடுத்து பங்கேற்று கவனம் பெற்றுள்ளார்.
டைரக்டர்கள் ஆர்வம்
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார் நடராஜன். தற்போது இங்கிலாந்து தொடரில் இருந்து இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க அதிகமான டைரக்டர்கள் ஆர்வம் காட்டுவதாக நடராஜன் தெரிவித்துள்ளார்.
நடராஜனின் இலக்கு
தான் இல்லாத நேரத்தில் தனது குடும்பத்தினரிடம் அவர்கள் இதுகுறித்து பேசியுள்ளதாக நடராஜன் கூறியுள்ளார். ஆனால் தற்போது தான் இதுகுறித்தெல்லாம் யோசிக்க விரும்பவில்லை என்றும் இந்திய அணியில் சிறப்பான இடத்தை பெறுவதே தற்போதைய நிலையில் தனது இலக்கு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.