மொகாலி: முதல் டெஸ்ட் போட்டி மூன்றே நாட்களில் முடிந்த நிலையிலும், பிட்சில் எந்த பிசாசும் இல்லை என்று இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.
மொகாலி நகரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கிய முன்றாம் நாளான இன்று தேனீர் இடைவேளை முடிந்த சில நிமிடங்களிலேயே தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் 109 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா 108 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பிட்சில் பிசாசு இருப்பதை போல பேட்ஸ்மேன்கள் அவுட் ஆகி வெளியேறுகிறார்கள் என்று டிவி வர்ணணையாளர்கள் கேலி செய்தனர்.
போட்டிக்கு பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் இந்திய கேப்டன், கோஹ்லி கூறியதாவது: போட்டி முழுக்க, பந்து வீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. ஆனால் பிட்சில் பிசாசு எதுவும் கிடையாது. எந்த ஒரு பந்தும் மிகமோசமாக சுழன்று வரவில்லை. பேட்ஸ்மேன்கள் அட்ஜஸ்ட் செய்து ஆடாததுதான் விக்கெட் வீழ்ச்சிக்கு காரணம்.
மனபலம்தான் இதுபோன்ற பிட்சுகளில் முக்கியமானது. முரளி விஜய் மற்றும் புஜாரா ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம். இரு இன்னிங்சுகளிலும் அவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு பங்களித்தனர். ஓரளவுக்கு தரப்படும் பங்களிப்பும் இதுபோன்ற பிட்சுகளில் பெரும் நன்மையை தரும்.
ஜடேஜா சிறப்பாக செயல்படுவதை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளேன். ரஞ்சி தொடரில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதால் அணிக்கு திரும்பிய ஜடேஜா, இங்கும் தனது தன்னம்பிக்கையை காண்பித்தார். பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் பங்களிக்க கூடியவர் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
218 ரன்களை தென் ஆப்பிரிக்கா கடந்துவிடும் என்று நாங்கள் அச்சப்படவில்லை. ஏனெனில் இந்திய பேட்ஸ்மேன்களை போலவே, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களும் அடித்து ஆட கஷ்டப்படுவார்கள் என்றுதான் கணித்திருந்தோம். இவ்வாறு கோஹ்லி கூறினார்.