சென்னை: தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் கோவை அணிக்கு எதிராக திருவள்ளூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் வீரன்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த திருவள்ளூர் அணிக்கு ஹரி நிஷாந்த் (18), கவின் (31) கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் பாபா அபராஜித் 34 பந்தில் அரைசதம் கடந்தார்.
திருவள்ளூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. அபராஜித் (74 ரன், 39 பந்து, 6 சிக்சர், 2 பவுண்டரி), ரோகித் (21) அவுட்டாகாமல் இருந்தனர். கோவை அணி சார்பில் ஹரிஷ் குமார் 2 விகெட் வீழ்த்தினார்.
திருவள்ளூர் வீரனை தொடர்ந்து அடுத்து களம் இறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர்கள் சூரிய பிரகாஷ் (17), தருண் (10) ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் களமிறங்கிய அனிரூத் நிதானமாக ஆடி 63 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் சையது (8), முகமது (12) அவுட்டாக கோவை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
ராகில் ஷா வீசிய இந்த ஓவரில் முதல் 3 பந்தில் 4 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. அடுத்த 2 பந்தில் ஒரு பவுண்டரி உள்பட 6 ரன் எடுத்தார் ஹரிஸ். கடைசி பந்தில் 3 ரன் தேவை என்ற நிலையில் இருந்தபோது ரன் எதுவும் எடுக்க முடியாமல் போனதால் திருவள்ளூர் வீரன்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் திருவள்ளூர் வீரன்ஸ் 4வது வெற்றியை பதிவு செய்தது.