திண்டுக்கல்: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளைகள் அணிக்கு எதிரான போட்டியில் திருவள்ளூர் வீரன் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியும், காரைக்குடி காளைஸ் அணியும் மோதின. இப்போட்டி திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற திருவள்ளூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய காரைக்குடி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணிக்கு விஜய் குமார் 43, ஸ்ரீனிவாஸ் 50, ராஜ்குமார் 34 ரன்கள் எடுக்க 6 விக்கெட் இலப்பிற்கு 165 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய திருவள்ளூர் அணி வீரர்கள் சற்று சொதப்பினாலும் அந்த அணியின் கேப்டன் பாபா அபராஜித் நிதானமான ஆடி அணிக்காக ரன்களை குவித்தார். இவர் போட்டியின் முடிவில் 118 ரன்கள் அடித்ததையடுத்து டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் முதல் சதத்தை அடித்து சாதனை படைத்தார். திருவள்ளூர் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிரடியாக ஆடிய அபராஜித் 6 சிக்சர், 12 பவுண்டரிகள் உள்பட 63 பந்துகளில் 118 ரன்களும், ரங்கராஜன் 30 ரன்களும் எடுத்தனர். அபாரமாக ஆடிய அபராஜித் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
காரைக்குடி காளைகள் அணி சார்பில் சந்திரசேகர் கணபதி 2 விக்கெட்டும், சுரேஷ் பாபு, சுஜை, ராஜ்குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.