டெல்லி: பெரியவர்களே அஞ்சும் வில்வித்தை களத்தில் சாதித்து வருகின்றார் 2 வயதான குட்டிப்பெண்ணான டாலி ஷிவானி.
வாடகைத்தாய் மூலமாக இந்த உலகிற்கு வந்த குட்டிப் பெண் டாலி ஷிவானி செருகுரி . 2010 ஆம் ஆண்டு சர்வதேச வில்வித்தை பயிற்சியாளரான இவரது அண்ணன் ஒரு சாலை விபத்தில் பலியானார்.
2004 ஆம் ஆண்டு இவரது மூத்த சகோதரியும் பலியானார். அவர்களின் வழியில், ஏன் அவர்களையே மிஞ்சும் வகையில் ஒரு அரிய சாதனையை செய்திருக்கிறாள் டாலி.

5 மற்றும் 7 மீட்டர் அளவிலான வில்வித்தை போட்டியில் 200 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் இளம் வயதில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் டாலி. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று அரங்கேறிய டாலியின் இந்த சாதனை, இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்த அரிய சாதனையை நேரில் பார்த்த சவுத்ரி "இது யாரலும் எளிதில் முறியடிக்க முடியாத மிகப்பெரும் சாதனை" என்கிறார். வில்வித்தை வீரர்களுக்கான அகாடமி நடத்தி வரும் டாலியின் தந்தையான செருகுரி, சிறு வயதிலிருந்தே டாலியிடம் கார்பன் அம்புகளைக் கொடுத்து ஆரம்ப கால பயிற்சியைத் தொடங்கியிருக்கிறார்.
அவளது ஆர்வத்தைப் பார்த்து விரைவிலேயே வில்வித்தை பயிற்சி கொடுக்க ஆரம்பித்து விட்டார். இன்று தங்கப்பதக்கத்துடனும், சாதனைச் சான்றிதழுடனும் ஜொலிக்கும் இந்த குட்டிப்பெண் டாலி இன்னும் 9 நாள்களில் தன் 3 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறாள்.
வாழ்த்துக்கள் டாலி!!