Recommended Video
2019 உலகக்கோப்பை தொடர்
2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. அந்த போட்டிக்கு பின் தோனி இந்திய அணியில் இணைந்து எந்த போட்டியிலும் ஆடவில்லை. அவராகவே அணியை விட்டு விலகி இருப்பதாக கூறப்படுகிறது.
தோனி நிலை என்ன?
இந்த நிலையில், ஜனவரி மாதம் அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது முதல் அவர் தீவிர கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டார். அதைக் கண்ட சிலர் அவர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நுழைய முயற்சி செய்கிறார் என்றனர்.
2020 ஐபிஎல் பயிற்சி
அதை அடுத்து மார்ச் மாத துவக்கம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்து அதிரடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். முன் எப்போதும் இல்லாத அளவு தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டதை வைத்தும் அவர் டி20 உலகக்கோப்பையில் இடம்பெறவே இப்படி தீவிர பயிற்சியில் இருக்கிறார் என்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு
இதற்கிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு உலகில் ஏற்பட்டது. கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டன. 2020 ஐபிஎல் தொடர் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது தோனிக்கும் பெரிய பாதிப்பாக அமைந்தது.
தோனி ஓய்வா?
ஐபிஎல் தொடரில் ஆடி தன் பார்மை நிரூபிக்கவில்லை என்றால் தோனி இந்திய அணியில் இடம் பெற முடியாது. எனவே, அவர் விரைவில் ஓய்வை அறிவிக்கப் போகிறார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. அதனால், தோனி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து இருந்தனர்
சிஎஸ்கே சொன்ன நல்ல செய்தி
இந்த நிலையில், சமீபத்தில் ஐபிஎல் தொடர் பற்றி பேசிய ஒரு சிஎஸ்கே அணி நிர்வாகி, தோனி இந்திய அணிக்கு ஆடுவது அவரது கைகளில் தான் உள்ளது. ஆனால், அடுத்த இரண்டு, மூன்று ஐபிஎல் தொடர்களில் பங்கேற்பார் எனக் கூறி உள்ளார்.
வெற்றிகரமான கேப்டன்
தோனி ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். அவர் தொடர்ந்து அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் சிஎஸ்கே அணியை பிளே ஆஃப் அழைத்துச் சென்றுள்ளார். வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக விளங்குகிறார்.
ரசிகர்கள் குஷி
எனவே, இந்திய அணியில் ஆடுவதை விட ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி ஆடினால் கூட போதும் என அவரது ரசிகர்கள் குஷியாகி உள்ளனர். தோனி அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு சிஎஸ்கே அணியில் ஆடுவார் என்ற செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஐபிஎல் நடக்குமா?
ஆனால், இதில் முக்கியமான கேள்வி 2020 ஐபிஎல் தொடர் நடக்குமா? இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்காமல் போனாலும், கொரோனா வைரஸ்-க்கு எப்போது மருந்து அல்லது தீர்வு கிடைக்கும் என தெரியாத நிலையில், இனி கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.