மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் விராட் கோலி எப்படி செயல்பட்டார்? எப்படி ஒரே போட்டியில் இந்திய வீரர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்? என்பது குறித்து முன்னாள் இந்திய வீரர் கரன் சர்மா கூறி இருக்கிறார். அந்த போட்டியால் தான் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
2014 ஆம் ஆண்டில் தோனிக்கு விரலில் காயம் ஏற்பட்டதால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அடிலெய்டில் நடந்த அந்தப் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 517 ரன்கள் குவித்தது.

டேவிட் வார்னர் மற்றும் மைக்கேல் கிளார்க் சதம் அடித்து இருந்தனர். அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 444 ரன்கள் குவித்தது. விராட் கோலி சதம் அடித்து இருந்தார். முரளி விஜய், புஜாரா மற்றும் அஜின்கியா ரஹானே அரை சதங்கள் அடித்து இருந்தனர். அடுத்த ஆடிய ஆஸ்திரேலிய அணி 290 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இந்தியா அணிக்கு 364 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய மண்ணில் 364 ரன்கள் என்ற இலக்கை நான்காவது இன்னிங்ஸில் எட்டுவது என்பது கடினமானது. அந்த சூழ்நிலையில் பொதுவாக போட்டியை டிரா செய்ய முயல்வார்கள். ஆனால், விராட் கோலி அந்த இலக்கை நாம் சேஸிங் செய்ய வேண்டும் என இந்திய வீரர்களுக்கு கூறினார்.
பின்னர் முரளி விஜய் 99 ரன்களும், விராட் கோலி சதமும் அடித்தனர். எனினும், இந்திய அணி 315 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்தப் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த போதும், வெற்றிக்காக போராடியதை அனைவரும் பாராட்டினர்.
அந்த தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளில் தோனி அணிக்கு திரும்பி, கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்தது. மற்றொரு போட்டியை டிரா செய்தது. இந்தியா தொடரை இழந்ததை அடுத்து தோனியின் கேப்டன்சி மற்றும் டெஸ்ட் போட்டி பேட்டிங் குறித்து கடும் விமர்சனம் எழுந்தது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தோனியை நீக்கி விட்டு விராட் கோலியை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதை தொடர்ந்து தோனி தாமாக கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
இரண்டு கேப்டன்களுக்கு இடையேயான மாற்றத்தை குறித்து பேசிய கரன் ஷர்மா, "அது முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையாக இருந்தது. வேறு கேப்டன், வேறு அணுகுமுறை என்பதாக இருந்தது. நாங்கள் 300 ரன்களை நான்காவது இன்னிங்ஸில் எட்டினோம். அதுவும் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில். அது மிகவும் கடினமானது. நாங்கள் தோல்வி அடைந்த போதும் வீரர்கள் இடையே அது உங்கள் கேப்டன் மாறுபட்ட திட்டத்தை வைத்துள்ளார் என்ற அற்புதமான சமிக்ஞைகளை அளித்தது." என்றார்.