சென்னை : யுவராஜ் சிங் எந்த மாதிரி நிலைமையில் 2011 உலகக்கோப்பை தொடரில் ஆடினார் என்பதை அப்போது அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்த அஸ்வின் கூறி இருக்கிறார்.
யுவராஜ் சிங் அப்போது தனக்கு புற்றுநோய் இருப்பதே தெரியாமல் இந்திய அணியில் ஆடி வந்தார். அவரது ஆட்டத்தால் தான் இந்தியா பல போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. 2011 உலகக்கோப்பை தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் சிங் தான் தட்டிச் சென்றார்.

ஆனால், தனக்கு புற்றுநோய் இருப்பதே தெரியாமல் தான் அப்போது ஆடி இருந்தார். அதே சமயம், அவருக்கு அப்போதே புற்றுநோய் முற்றியதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி இருந்தன. கடும் இருமல், அடிக்கடி காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு நடுவே யுவராஜ் சிங் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
உலகக்கோப்பை தொடர் முடிந்த பின்னரே தன் மோசமான உடல்நிலை குறித்து அவர் பரிசோதனை செய்த போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதைக் கேட்டு இந்தியாவே அதிர்ச்சியில் உறைந்தது.
இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், "யுவராஜுக்கு அப்போது இருமல் இருந்தது, அவர் கடுமையாக இருமுவார். அது விளையாட்டின் அழுத்தம் என்று அப்போது நான் நினைத்தேன். சில சமயம் அவருக்கு இருமல் இருக்காது. திடீரென நடுவில் இருமுவார். உண்மையில், அவர் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அணியின் ஜூனியர் பிரிவில் இருந்த எங்கள் யாருக்கும் எந்த யோசனையும் இல்லை" என்றார்.
மேலும், "யுவராஜுக்கு புற்றுநோய் என்பது தெரிய வந்தபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில், உலகக்கோப்பை தொடர் நாயகனுக்கு இப்படி ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை, உண்மையில் யுவராஜ் சிங் இந்தியாவின் சின்னம். அந்த யுவராஜ் சிங்கின் உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் நம்பமுடியாத அளவிற்கு பெரிய பங்கு வகித்தார் என்று நினைக்கிறேன். நான் ஏன், யுவராஜ் சிங்கை உலகக் கோப்பை தொடர் நாயகன் என்று அழைக்கிறேன் என்றால் அவர் அப்போது உலகக்கோப்பையின் மையத்தில் இருந்தார்" என்று அஸ்வின் கூறினார்.