கொல்கத்தா : ஐதராபாத் அணியின் கிளாசன் அதிரடி தன் வயிற்றில் புளியை கரைத்துவிட்டதாக கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. அதிரடி வீரர் ரஸ்ஸல் 25 பந்துகளில் 64 ரன்களை விளாசினார். இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

சிறப்பாக ஆடிய கிளாசன் 29 பந்துகளில் 63 ரன்களை விளாசினார். கேகேஆர் அணியின் கைகளுக்கு ஆட்டம் சென்றிருந்த நிலையில், 18 மற்றும் 19 ஆகிய ஓவர்களில் கிளாசன் மற்றும் ஷாபாஸ் அஹ்மத் கூட்டணி 47 ரன்களை குவித்தது. இறுதியாக ஹர்சித் ராணாவின் பவுலிங் மற்றும் சுயாஷ் சர்மாவின் அபாரமான கேட்ச் காரணமாக கேகேஆர் அணி த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த வெற்றி குறித்து கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் பேசுகையில், 17வது ஓவருக்கு பின் என் வயிற்றில் புளியை கரைத்துவிட்டனர். கடைசி ஓவரில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்ற நிலை வந்தது. அவர்கள் வெற்றிபெற 13 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த போது, நம்பிக்கை வைத்து ஹர்சித் ராணா கைகளில் பந்தை கொடுத்தேன். அவருக்கு குறைந்த அனுபவம் தான் உள்ளது. அப்போது, என்ன நடந்தாலும் பிரச்சனையில்லை.. கவலைப்படாமல் பவுலிங் செய் என்று கூறினேன்.
ஹர்சித் ராணாவுக்கு கொஞ்சம் பதற்றம் இருந்தது. அப்போது அவரின் கண்களை பார்த்து, இதுதான் உனக்கான நேரம் தம்பி என்று கூறினேன். அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார். ரஸ்ஸல் மற்றும் நரைன் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். ரஸ்ஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. நரைன் வழக்கம் போல் பவுலிங்கில் அசத்திவிட்டார்.
முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்குவது எப்போதும் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஃபீல்டிங்கில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றமடைய வேண்டும் என்று நினைக்கிறேன். கொல்கத்தா ரசிகர்களின் சத்தம் அதிகமாக இருப்பதால், டீப் திசையில் ஃபீல்டிங் செய்தால், மற்ற வீரர்களுக்கு சிக்னல் கொடுப்பது எளிதாக இருக்கவில்லை என்று தெரிவித்தார்.