தோனி நிலை
தோனி கடந்த ஜூலை மாதத்தில் நடந்த 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் ஆடவில்லை. உள்ளூர் போட்டியிலும் ஆடவில்லை. இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
ஐபிஎல் கதி
இந்த நிலையில், 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டி தோனி ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபித்து காட்ட தயாராகி வந்தார். ஆனால், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டிகள் நிலை
ஐபிஎல் தொடர் மீண்டும் நடக்குமா? என்பதும் தெரியவில்லை. கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது தெரியாத நிலையே உள்ளது. குறிப்பாக டி20 உலகக்கோப்பை நிலை என்ன என்பதும் கேள்விக் குறியாக உள்ளது.
ஓய்வு முடிவு
இனி சர்வதேச கிரிக்கெட்டில் ஆட முடியாத நிலையில் தோனி விரைவில் ஓய்வு முடிவை அறிவிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. தோனி ஏற்கனவே ஓய்வு முடிவு பற்றி அவரது நெருக்கமான வட்டாரத்திடம் பேசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வாசிம் ஜாபர் ட்விட்டர்
இந்த நிலையில், முன்னாள் இந்திய அணி வீரர் வாசிம் ஜாபர் ட்விட்டரில் கேள்வி பதில் நிகழ்வை நடத்தினார். சமீபத்தில் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்த வாசிம் ஜாபர், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அந்த கேள்வி
ஒரு ரசிகர் தோனி புகைப்படத்தை பகிர்ந்து தோனி உடனான மறக்க முடியாத ஞாபகம் ஏதாவது உள்ளதா? என வாசிம் ஜாபரிடம் கேள்வி கேட்டு இருந்தார். இந்த கேள்விக்கு வாசிம் ஜாபர் தோனியின் இளமைக் காலத்தில் அவர் கூறிய ஒரு விஷயத்தை தெரிவித்தார்.
ஜாபர் சொன்ன பதில்
தோனி இந்திய அணியில் இடம் பெற்ற முதல் அல்லது இரண்டாவது ஆண்டில், தன் ஓய்வு திட்டம் பற்றி பேசி உள்ளார். தான் கிரிக்கெட் ஆடி 30 லட்சம் பணம் சேர்க்க வேண்டும் என்றும், அதன் பின் தன் சொந்த ஊரான ராஞ்சியில் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் கூறினாராம் தோனி.
நம்பவே முடியாது
ஆனால், இதை இப்போது யாராலும் நம்ப முடியாது. காரணம் தோனி பல நூறு கோடிகளுக்கு அதிபதி. மேலும், இந்திய அணி கேப்டனாக அவர் ஆவார் என்பதை தோனி உட்பட யாரும் நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால், அதுதான் நடந்தது.
அமைதியான வாழ்க்கை
தோனி இனி நினைத்தாலும் அமைதியான வாழ்க்கை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரை பார்த்து விட மாட்டோமா? என ஏங்குவது ஒரு பக்கம் என்றால், மறுபுறம் அவரது சாதாரண செயல்பாடுகள் கூட விமர்சிக்கப்படுகின்றன.
நிதி சர்ச்சை
சமீபத்தில் கொரோனா வைரஸ் நிவாரண நிதியாக ஒரு அமைப்புக்கு 1 லட்சம் அளித்து இருந்தார் தோனி. அதை பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். கோடீஸ்வரரான தோனி, ஒரு லட்சம் தான் கொடுத்தாரா? என கூறி வருகின்றனர்.