காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் நிலவிவரும் பதற்றமான சூழல், தற்போது விளையாட்டு உலகிலும் ஒரு கருப்பு அத்தியாயத்தை எழுதியுள்ளது. பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில், மூன்று இளம் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்திகா மாகாணத்தில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஷரானா என்ற இடத்தில், அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்காக, ஆப்கானிஸ்தான் வீரர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில், உர்குன் மாவட்டத்தைச் சேர்ந்த கபீர், சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள், பயிற்சி முடிந்து தங்களது சொந்த ஊரான உர்குனுக்குத் திரும்பியுள்ளனர். அங்கு, அவர்கள் ஒரு கூட்டத்தில் பங்கேற்றிருந்தபோது, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
"பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதலில்," இந்த மூன்று வீரர்களுடன் மேலும் ஐந்து பேரும் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். "பக்திகா மாகாணத்தைச் சேர்ந்த எங்களது துணிச்சலான கிரிக்கெட் வீரர்களின் சோகமான மரணத்திற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது," என்று ACB தனது ட்விட்டர் (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட எல்லை மோதல்களைத் தொடர்ந்து, 48 மணி நேரப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் இந்த வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. உர்குன் மற்றும் பர்மால் மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் குறிவைக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்காக தோஹாவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, அமைதி முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபஸல்ஹக் ஃபரூக்கி மற்றும் முகமது நபி தங்கள் கண்டனத்தை பதிவிட்டு உள்ளனர்.
ஃபஸல்ஹக் ஃபரூக்கி: "இந்த அடக்குமுறையாளர்களால் அப்பாவி பொதுமக்களும், எங்களது உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களும் படுகொலை செய்யப்பட்டது, ஒரு கொடூரமான, மன்னிக்க முடியாத ற்றம்," என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முகமது நபி: "இந்தச் சம்பவம் பக்திகாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு பேரிழப்பு" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
விளையாட்டு என்பது நாடுகளை இணைக்கும் ஒரு பாலம். ஆனால், அந்தப் பாலத்தையே தகர்க்கும் வகையில், அப்பாவி விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், மனிதநேயத்தின் மீதான ஒரு கரும்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் உலகம் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பைச் சந்தித்துள்ளது.