
ஐபிஎல் ஏலம் 2021
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் வழக்கமாக நடைபெறும் காலத்தில் நடைபெறும் என்றும் இந்தியாவிலேயே நடத்தப்படும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஏலம் நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.

அதிக விலைக்கு ஏலம்
இந்த போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் உள்நாட்டு வீரர்கள் என முக்கிய வீரர்கள் பலர் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் சரியாக விளையாடாத வீரர்களுக்கு கூட இந்த தொடரில் அதிக கிராக்கி காணப்பட்டதை காண முடிந்தது.

சிறப்பாக செயல்பட்ட வீரர்கள்
அனைத்து அணிகளும் தங்களது வெளிநாட்டு வீரர்களின் கோட்டாவை பூர்த்தி செய்துள்ளன. இந்நிலையில் இந்த தொடரில் முகமறியாத உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஷாருக்கான், சகரியா, கிருஷ்ணப்பா கௌதம் போன்ற இளம் வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுளள்னர்.

ரூ.5.25 கோடிக்கு ஷாருக்கான் ஏலம்
தமிழ்நாட்டு வீரரான ஷாருக்கான இந்த தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார். கடந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து ஏலத்தில் இவருக்கு அதிக கிராக்கி காணப்பட்டது. டெல்லி கேபிடல்ஸ், ஆர்சிபி அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன.

சேத்தன் சகரியா சிறப்பு
அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அதிக தொகைக்கு சேத்தன் சகரியா ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவரின் ஏலத்தொகை 1.2 கோடி ரூபாய். சௌராஷ்டிராவை சேர்ந்த இடதுகை பந்துவீச்சாளரான இவர் சமீபத்தில் சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

கிருஷ்ணப்பாவை ஏலம் எடுத்த சிஎஸ்கே
அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 9.25 கோடி ரூபாய்க்கு கிருஷ்ணப்பா கௌதம் வாங்கப்பட்டுள்ளார். இளம் வீரருக்கு இத்தகைய தொகையை செலவிட்டுள்ளது சாதனையாக கருதப்படுகிறது. முன்னதாக கடந்த 4 ஆண்டுகளில் இவர் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக 24 போட்டிகளில் விளையாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











