டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியில் இருந்து வரும் என். சீனிவாசன், வாரிய தலைவர் பதவியை ஏற்கவுள்ளதால், காலியாகும் செயலாளர் பதவியைப் பெற மூன்று பேருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து சஷாங் மனோகர் ஓய்வு பெறுகிறார். அடுத்த மாதம் அவர் பதவியிலிருந்து இறங்கியவுடன், புதிய தலைவராக தற்போதைய செயலாளர் சீனிவாசன் பொறுப்பேற்கவுள்ளார்.
இதனால் காலியாகும் செயலாளர் இடத்திற்கு வர தற்போது மூன்று பேர் இடையே மோதல் நிலவுகிறது.
ஒரிசாவின் ரஞ்சீப் பிஸ்வால், ஹிமாச்சல் பிரதேசத்தின் அனுராக் தாக்கூர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அமிதாப் செளத்ரி ஆகியோருக்கிடையேதான் அந்த மோதல் காணப்படுகிறது.
இவர்களில் பிஸ்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இவரை செயலாளர் பதவிக்கு நியமிக்க கிழக்கு மண்டல கிரிக்கெட் சங்கங்களான பெங்கால், அஸ்ஸாம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநில கிரிக்கெட் சங்கங்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றன.
இருப்பினும் பிஸ்வால் நீண்டகாலம் கிரிக்கெட் தேர்வாளராகப் பணியாற்றியுள்ளதும், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது வெற்றி பெற்று சாம்பியனான இந்திய அணியின் மேலாளராகப் பணியாற்றியதும் அவருக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
மேலும் பல வெளிநாட்டு தொடர்களின்போது இந்திய அணியின் மேலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இப்படி பல சாதகமான விஷயங்கள் உள்ள போதிலும் பிஸ்வாலுக்கு எதிர்ப்புகளும் பெரிதாகவே இருப்பதால் அவர் வெற்றி பெற்றாலும் கூட அது எளிதானதாக இருக்க முடியாது என்று கூறப்படுகிறது.
கிழக்கு மண்டல சங்கங்கள் ஒரே குரலில் செளத்ரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. இதனால் போட்டி கடுமையாகியுள்ளது.
மறுபக்கம் அனுராக் தாக்கூர் நிற்கிறார். இவர் தனி மனிதராக தர்மசாலாவில் கிரிக்கெட் ஸ்டேடியத்தை எழுப்பிய பெருமைக்குரியவர். எனவே இவருக்கும் வாய்ப்பு உள்ளது.
உலகிலேயே மிகப் பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாதாரத்தை நிர்வகிக்கப் போகும் செயலாளர் பதவியை அடைய இப்படி மூன்று பேருக்கு இடையே போட்டி கடுமையாகியுள்ளதால் எதிர்பார்ப்புகளும் அதிகமாகவே உள்ளன.