டர்பன் டெஸ்ட்-87 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

டர்பனில் நடந்து வந்த டெஸ்ட் போட்டியில் வெல்வது இந்தியாவுக்கு அவசியமானதாக இருந்தது. இப்போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்ய முடியும், 3வது டெஸ்ட்டில் வென்று தொடரைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற நிலையில் இருந்தது இந்தியா.
அதற்கேற்ப அதன் ஆட்டமும் அமைந்தது. முதல் இன்னிங்ஸில் வழக்கம் போல குறைந்த ஸ்கோரில் சுருண்டாலும் (205), பவுலிங்கில் புலிப் பாய்ச்சல் காட்டி தென் ஆப்பிரிக்காவை 131 ரன்களில் சுருட்டி விட்டது இந்தியா.
இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு முக்கிய வீரர்கள் கை கொடுக்க தவறினாலும், அனுபவம் வாய்ந்த வி.வி.எஸ்.லட்சுமண் அபாரமான ஆட்டத்தைக் காட்டி இந்தியாவை தலை நிமிரச் செய்தார். அவர் போராடி எடுத்த 96 ரன்களால் இந்தியா 2வது இன்னிங்ஸில் 228 ரன்களை எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை தென் ஆப்பிரிக்கா சந்தித்தது.
ஆனால் அதன் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மித்தும், பீட்டர்சனும் மிரட்டலான ஆட்டத்தைக் கொடுத்ததால் சற்றே பீதி ஏற்பட்டது. ஆனால் ஸ்ரீசாந்த் தனது அபார பந்துவீச்சால் ஸ்மித்தை வீழ்த்தினார். ஹர்பஜன் சிங் பீட்டர்சனை விரட்டினார்.
அதைத் தொடர்ந்து அடித்து ஆட முயன்ற அம்லாவை ஸ்ரீசாந்த் வெளியேற்றவே தென் ஆப்பிரிக்கா இக்கட்டில் ஆழ்ந்தது.
இந்த நிலையில் இன்று மீண்டும் விறுவிறுப்பான ஆட்டம் தொடர்ந்தது. குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்கள் விழவே இந்தியாவின் கை ஓங்கி வந்தது. இந்தியப் பந்து வீச்சு குறிப்பாக ஸ்ரீசாந்த்தின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. அவருக்கு ஜாகிர்கானும், இஷாந்த் சர்மாவும் நல்ல துணையாக இருந்தனர்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா பலவீனமாகி வந்தது. ஒரு கட்டத்தில் ஆஷ்வெல் பிரின்ஸ் கட்டையைப் போட்டு ஆட ஆரம்பித்ததால் தென் ஆப்பிரிக்காவுக்கு சாதகமான சூழல் காணப்பட்டது.
ஆனால் சரியான நேரத்தில் இஷாந்த் சர்மா, மார்க்கலை வெளியேற்றி இந்தியாவின் வெற்றியைப் பிரகாசப்படுத்தி விட்டார். இறுதியாக ஸோத்சோபேயை சட்டேஸ்வர் பூஜாரா ரன் அவுட் செய்ய தென் ஆப்பிரிக்காவின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற சம நிலைக்குக் கொண்டு வந்து விட்டது.
3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை வெல்ல முடியும். இந்தியா இதுவரை தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குறையை நீக்க 3வது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் இதே முனைப்புடன் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications