உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி-சென்னையில் படு சூடான டிக்கெட் விற்பனை

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 19ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. சென்னையில் நான்கு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. இதற்காக இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு வெளியே கூடி விட்டனர். இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அனைவரையும் முறையாக வரிசையில் நிற்க வைத்தனர்.
இதையடுத்து காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கியது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ. 500ம், அதிகபட்சம் ரூ. 20,000 என்றும் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்து விழுந்தது:
ஆயிரக்கணக்கானோர் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் பாரம் தாங்காமல் மைதானத்தின் சுற்றுச் சுவரின் ஒரு பகுதி மளமளவென சரிந்து இடிந்து விழுந்தது. இதில் ஒரு பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மார்ச் 20ல் இந்தியா மோதும் போட்டி:
சென்னையில் முதல் போட்டி பிப்ரவரி 20ம் தேதி நடைபெறுகிறது. அப்போட்டியில் நியூசிலாந்தும், கென்யாவும் மோதுகின்றன. மார்ச் 6ம் தேதி இங்கிலாந்து தென் ஆப்பிரிக்காவும், மார்ச் 17ம் தேதி இங்கிலாந்து மேற்கு இந்தியத் தீவுகளும் மோதுகின்றன.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா மோதும் போட்டி மார்ச் 20ம்தேதி நடைபெறுகிறது. அப்போட்டியில் இந்தியாவுடன், மேற்கு இந்தியத் தீவுகள் மோதவுள்ளது. இந்தப் போட்டிக்குத்தான் டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications