பகலிரவு ஆட்டம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசத்துடன் இந்திய அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22ம் தேதி துவங்கி 26ம் தேதிவரை நடைபெறவுள்ளது.
பிங்க் பால் போட்டி
கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்திருந்தார். மேலும் இந்த போட்டிகளில் பிங்க் பால்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
மைதானத்திற்கு பந்துகள் வருகை
இன்னும் சில தினங்களில் போட்டி நடைபெறவுள்ள நிலையில், போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானத்திற்கு பிங்க் பந்துகள் வந்துள்ளன. இவற்றின் தரம் குறித்த சர்ச்சை நிலவிவரும் நிலையில், இவற்றை நிபுணர்களின் உதவியுடன் சோதிக்கும் பணி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறப்பான அனுபவம்
இந்த போட்டி துவங்கப்படுவதற்கு முன்பாக பேண்ட் வாத்தியங்களுடன் தேசிய கீதம் ஒலிக்கப்பட உள்ளதாக பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் அவிஷேக் தால்மியா தெரிவித்துள்ளார்.
கேப்டன்களிடம் பிங்க் பால் ஒப்படைப்பு
இந்நிலையில் துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் கீழிறங்கி பிங்க் பால்களை இரண்டு அணிகளின் கேப்டன்களிடம் அளிக்கும்படியான நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளதாக தால்மியா தெரிவித்தார். ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மேற்குவங்க முதல்வர் பங்கேற்பு
இந்த போட்டியின் துவக்கவிழாவில் வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துக் கொண்டு, ஈடன் பெல்லை அடித்து போட்டியை துவக்கி வைக்கவுள்ளதாகவும் தால்மியா தெரிவித்தார்.