
2வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இதில் 227 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இதையடுத்து வரும் 13ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி சென்னையிலேயே துவங்கி நடைபெறவுள்ளது.

2 போட்டிகளை வெல்லும் கட்டாயம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து ஏற்கனவே தேர்வாகியுள்ளது. இங்கிலாந்து அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்னும் இரண்டு போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தேர்வாகும். இதேபோல இந்திய அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்த தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

ரசிகர்களுக்கு அனுமதி
இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் முதல் போட்டி ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 2வது போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கொரோனா காரணமாக ரசிகர்கள் மைதானங்களில் அனுமதிக்கப்படாத நிலையில், தற்போது அனுமதிக்கப்பட உள்ளதால் இதுவும் இந்த இரண்டாவது போட்டியை முக்கியமாக உணர செய்துள்ளது.

10,000 டிக்கெட்டுகள் விற்பனை
இதற்காக கடந்த 8ம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய நிலையில், ஒரு மணிநேரத்தில் 10,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 33,500 பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும். ஆனால் 50 சதவிகிதம் மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

10,000 ரசிகர்கள்
வீரர்களின் குடும்பத்தினர், பிசிசிஐ உறுப்பினர்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு 10,000 பேருக்கு மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஒரு வருடத்திற்கு பிறகு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் 13ம் தேதி துவங்கவுள்ள போட்டி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











