கொழும்பு: இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா தனது முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.
இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் திலக் வர்மா. ஐபிஎல் தொடரில் சக்கை போடு போட்டதால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சிக்சர் அடித்து ரன் கணக்கை தொடங்கினார். 5 போட்டிகளில் ஆடிய திலக் வர்மா மொத்தமாக 173 ரன்களை விளாசி தள்ளினார்.

அதுமட்டுமல்லாமல் பார்ட் டைம் பவுலரான திலக் வர்மா, சில விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் காரணமாக இந்திய அணியின் டாப் ஆர்டர் ஆல் ரவுண்டர் தயா என்று ரசிகர்கள் கொண்டாடினர். அதுமட்டுமல்லாமல் ஆசியக் கோப்பைக்கான அணியில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாமல் புறக்கணித்து, அஜித் அகர்கர் - ரோகித் சர்மா கூட்டணி திலக் வர்மாவை சேர்த்தது.
அதற்கு இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் பார்ட் டைம் பவுலர் என்ற காரணமும் கூறப்பட்டது. இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் திலக் வர்மா அறிமுகம் செய்யப்பட்டார். கேப்டன் ரோகித் சர்மா அவருக்கு தொப்பியை வழங்கி ஒருநாள் கிரிக்கெட்டுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து ஃபீல்டிங்கின் போது ஒரு கேட்ச்சை கோட்டைவிட்ட திலக் வர்மா, பின்னர் சிறப்பாக ஃபீல்டிங் செய்தார்.

இந்த நிலையில் 266 ரன்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா - கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா டக் அவுட்டாகி அறிமுக வீரர் தன்ஜிம் ஹசன் ஷகிப் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து இந்திய அறிமுக வீரர் திலக் வர்மா களமிறங்கினார். தன்ஜிம் வீசிய 3வது ஓவரில் பவுண்டரி விளாசி நம்பிக்கையுடன் ஆடினார். ஆனால் அதே ஓவரின் 4வது பந்திலேயே போல்டாகி வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அறிமுகப் போட்டியிலேயே திலக் வர்மா 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்காகவா சஞ்சு சாம்சனை புறக்கணித்து இந்திய அணிக்கு தேர்வு செய்தீர்கள் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யாமல், இவரை அறிமுகப்படுத்துவது அவசியமா என்றும் கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.