லக்னோ: திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் ஆக்கிய விவகாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக இந்திய அணி வீரர் ஹனுமா விஹாரி பொங்கி எழுந்து இருக்கிறார். தனது சமூக வலைதள பக்கத்தில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு நியாயம், திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா என கேள்வி எழுப்பும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
திலக் வர்மா மற்றும் ஹனுமா விஹாரி ஆந்திர மாநில அணிக்காக ஒன்றாக விளையாடி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திலக் வர்மாவுக்கு எதிராக இழைக்கப்பட்ட மோசமான செயலுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து இருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்தபோது ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அப்போது அவர் ஏன் ரிட்டயர் அவுட் ஆகி வெளியேறவில்லை? என ஹனுமா விஹாரி முகத்தில் அடித்தாற்போல கேள்வி கேட்டிருக்கிறார்.
நேற்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 203 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் சேஸிங் செய்து வந்தபோது கடைசி இரண்டு ஓவர்களில் 29 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது திலக் வர்மா அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆட முடியாமல் திணறி வந்தார்.
இந்த நிலையில் 19வது ஓவரின் ஐந்தாவது பந்தின் முடிவில் அவர் ரிட்டையர்ட் அவுட் ஆகி வெளியேறினார். அதாவது ரிட்டையர்ட் அவுட் முறையில் தாமாகவே ஒரு பேட்ஸ்மேன் அவுட் ஆகி ஆடுகளத்தை விட்டு வெளியேறலாம். கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் இந்த மூடிவை எடுத்தார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்து நல்ல பேட்ஸ்மேன் யாரும் இல்லாத நிலையில் திலக் வர்மாவை ஹர்திக் பாண்டியா வெளியேறுமாறு சொன்னது பெரும் சர்ச்சையாக மாறியது.
அடுத்து மிட்செல் சாண்ட்னர் பேட்டிங் செய்ய வந்தார். திலக் வர்மாவை விட மிட்செல் சாண்ட்னர் பெரிய பேட்ஸ்மேன் இல்லை. அவரால் அதிக பவுண்டரிகளை அடிக்க முடியுமா? என்ற கேள்விகளும் இருந்தது. எதிர்பார்த்தது போலவே இந்த முடிவு தவறாகவும் அமைந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹர்திக் பாண்டியா தானே அனைத்து பந்துகளையும் ஆட முயற்சி செய்து வெறும் 9 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
இதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் முடிவில் முன்னாள் வீரர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவின் முடிவை விமர்சித்து வருகின்றனர். ஹனுமா விஹாரியும் விமர்சித்து இருக்கிறார். இது குறித்து ஹனுமா விஹாரி வெளியிட்டுள்ள பதிவில், "மிட்செல் சாண்ட்னருக்காக வர்மாவை ரிட்டயர் அவுட் ஆக்குகிறீர்களா? இதை எனக்கு புரிய வையுங்கள். ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ரன் குவிக்க முடியாமல் திணறினார். ஆனால், ரிட்டயர் அவுட் ஆகவில்லை. அப்படி என்றால் திலக் வர்மாவை மட்டும் ஏன் ரிட்டயர் அவுட் ஆக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மிட்செல் சாண்ட்னருக்காக திலக் வர்மாவை ரிட்டயர் அவுட் ஆக்குவது என்னை பொறுத்தவரை தவறு. திலக் வர்மாவை விட மிட்செல் சாண்ட்னர் சிறந்த பேட்ஸ்மேனா? ஒருவேளை கீரான் பொல்லார்ட் அல்லது அதுபோன்ற அதிரடி ஆட்டம் ஆடும் ஒருவருக்காக இந்த மாற்றத்தை செய்திருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது" என தெரிவித்திருக்கிறார்.