ஹாங்சோ: வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய போட்டிகள் அரையிறுதியில் அரைசதம் விளாசிய திலக் வர்மா, அதனை தனது அம்மாவிற்கு அர்ப்பணித்து இடுப்பில் குத்திய டாட்டூவை காட்டி கொண்டாடியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார் திலக் வர்மா. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அசத்திய திலக் வர்மா, அடுத்தடுத்து ஆசிய கோப்பை ஒருநாள் தொடரிலும் இந்திய அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார். அதேபோல் ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்தார். இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பார்ட் டைம் பவுலர் என்பதால் திலக் வர்மா முக்கியத்துவம் வாய்ந்த வீரராக கருதப்படுகிறார்.

இந்த நிலையில் இன்று ஆசிய போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றில் இந்திய அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் இளம் வீரர் திலக் வர்மா 2 ஓவர்கள் வீசி 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால் டக் அவுட்டாக, ருதுராஜ் கெய்க்வாட் உடன் திலக் வர்மா களமிறங்கினார். அப்போது திலக் வர்மா எதிர்கொண்ட 3வது பந்திலேயே சிக்சரை விளாச, 4வது ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தபட்சம் 2 சிக்சர்களை விளாசிய திலக் வர்மாவால், 18 பந்துகளிலேயே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டது.

அதேபோல் திலக் வர்மாவும் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். சிக்சர் அடித்து அரைசதம் விளாசிய திலக் வர்மா, அந்த அரைசதத்தை தனது அம்மாவிற்கு அர்ப்பணித்தார். தனது இடுப்பு பகுதியில் தாயின் முகத்தை டாட்டூவாக போட்டுள்ள திலக் வர்மா, தனது ஜெர்சியை விலக்கி காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்தப் போட்டிக்கு பின் திலக் வர்மா பேசுகையில், அந்த கொண்டாட்டம் எனது அம்மாவிற்காக தான். கடந்த சில போட்டிகளில் என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதேபோல் எனது மிகச்சிறந்த பிரெண்டான சமைராவிற்கும் அர்ப்பணிக்கிறேன். மேலும், ஒரு பவுலராக இன்னும் முன்னேற்றமடைய விரும்புகிறேன். ஆல்ரவுண்டராக விளையாடுவதையே இலக்காக வைத்துள்ளேன். பந்துவீச்சில் முன்னேற்றமடைய அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோருடன் பணியாற்றியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.