சென்னை : தமிழக அரசு இன்று (பிப்ரவரி 19, 2024) சட்டமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளித்து சில திட்டங்களை அறிவித்து இருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க சிறப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டார். அவரது அறிக்கையில், "விளையாட்டுப் போட்டிகளின் தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்றிடவும் இலட்சிய வேட்கையுடன் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்கிட, சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நான்கு ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும்" என்று கூறி இருந்தார்.

மேலும், "இப்பயிற்சி மையங்கள் இறகுப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, தடகளம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உலகத்தரமிக்க பயிற்சிகளை வழங்குவதுடன் விளையாட்டு அறிவியலுக்கான மையங்களாகவும் செயல்படும். தமிழ்நாட்டு இளைஞர்களின் ஆற்றலையும் அறிவுத்திறனையும் ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் மெருகேற்றி, உலகம் போற்றிடும் சாதனையாளர்களாக உருவாக்கிட முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடெங்கும் நடத்தப்படும்" என்று குறிப்பிட்டு இருந்தார்
இந்த திட்டம் மூலம் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரி மாவட்ட மக்கள் பயனடைவார்கள். நீலகிரியை விட கோவையில் ஒலிம்பிக் பயிற்சி மையம் அமைக்க திட்டமிட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எனினும், நீலகிரியில் மேற்கத்திய குளிர் பிரதேசங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர், வீராங்கனைகள் அதற்கு இணையான குளிரான சூழலில் பயிற்சி செய்ய முடியும். மேலும், கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு நீலகிரி சென்று வருவது எளிது தான் என்பதால் அந்த மாவட்டத்தை தமிழக அரசு தேர்வு செய்து இருக்கிறது. இந்த திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமிழகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.