இந்தியா, இலங்கை நாளை முதல் ஒரு நாள் போட்டியில் மோதல்
சென்னை: இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முதல் ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் மற்றும் ஒரு டுவென்டி-20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று இலங்கை சென்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை தம்புலாவில் நடக்கிறது. கடந்தமுறை இலங்கை சென்று ஒரு நாள் தொடரை 3-2 என கைப்பற்றி அசத்திய டோணி தலைமையிலான இந்திய அணி இம்முறையும் சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து டோணி கூறுகையில், ஹர்பஜன் இல்லாமல் விளையாட இருக்கிறோம். இது பின்னடைவு தான். ஓஜா மற்றும் ஜடேஜா இவரது இடத்தை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இவர்களை தவிர்த்த யுவராஜ், ஷேவாக், சச்சின் என பகுதிநேர பந்துவீச்சாளர்கள் நன்றாக செயல்பட்டு வருகிறார்கள்.
இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இது சவாலான தொடர் என்றார் டோணி.
அதேசமயம், கடந்த முறை தோற்றதற்கு இம்முறை பழி தீர்ப்போம் என சுழற்பந்து சூறாவளி முரளீதரன் கூறியுள்ளார். இந்தியாவை தோற்கடிக்க தீவிரமாக முயல்வோம் என்று கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும் கூறியுள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பலாம்.


Click it and Unblock the Notifications