இறுதிச்சுற்று
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் மோதின. இதில் கர்நாடக அணி நிர்ணயித்த 152 ரன்களை விரட்ட தமிழ்நாடு அணி சிரமப்பட்டது. பின்னர் கடைசி சில ஓவர்களில் சேசிங் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக்கான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சருடன் 33 ரன்கள் அடித்து தமிழ்நாடு அணியை வெற்றிபெற வைத்தார்.
வெற்றி
கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலை இருந்த போது இளம் வீரர் ஷாருக்கான் அபாரமான சிக்ஸரை விளாசி ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இதனால் அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அடுத்தாண்டு ஐபிஎல் மெகா ஏலத்தின் போது அவரின் மதிப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
தோனி காரணம்
இந்நிலையில் இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து வெற்றி பெற தோனி கொடுத்த அறிவுரைகள் தான் காரணம் என்று ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஐபிஎல் தொடரின்போது தோனியிடம் நான் பேசும் போது, ஒரு பினிஷர் ரோல் என்றால் என்ன என்பதை எனக்கு தெளிவாக விளக்கிக் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி களத்தில் நாம் செய்வது தான் சரி என்று நான் நம்பும் அளவிற்கு என்னிடம் எடுத்துக் கூறியிருந்தார்.
எனக்கு பதற்றமே இல்லை
ஆட்டத்தின் போக்கு எப்படி உள்ளது என்பதை களத்தில் நன்கு அறிபவர்கள் ஃபினிஷர்கள் தான். அதனால் நாம் எவ்வாறு விளையாடப் போகிறோம் என்பதும் இலக்கை விரட்டும் போது நம் மூளைக்குள் என்ன ஓடுகிறது என்பதையும் நாம் தான் சரியாக புரிந்து வைத்துள்ளோம் என தோனி விளக்கிக் கூறியிருந்தார். அவர் கூறிய அறிவுரையின் படியே நான் இறுதிவரை பதட்டமில்லாமல் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன் என அவர் கூறினார்.
பஞ்சாப் அணி
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் ஷாருக்கான் இம்முறை அதிக விலைக்கு ஏலம் போக அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடரின் இறுதிப் போட்டியை தோனி டிவியில் பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.