கோவை: புச்சி பாபு தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில் மும்பை அணியை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டிஎன்சிஏ லெவன் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸ் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய களமிறங்காதது ஏன் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
புச்சி பாபு தொடரின் ரவுண்ட் ராபின் சுற்றில் மும்பை - டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இந்திரஜித் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் களமிறங்கிய மும்பை அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் இமாலய முன்னிலையுடன் களமிறங்கி 2வது இன்னிங்ஸில் விளையாடிய டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் மும்பை அணி வெற்றிக்கு 510 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 6 ரன்களுடன் மும்பை அணி 4வது ஆட்டத்தை தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு முஷீர் கான் - திவ்யன்ஷ் சக்சேனா களமிறங்கி சில மணி நேரங்கள் தாக்கு பிடித்தனர்.
ஆனால் சோனு யாதவ் பவுலிங் சக்சேனா 26 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கட்டது. ஆனால் அவர் 79 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, தொடக்க வீரர் முஷீர் கானும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் சர்ஃபராஸ் கானும் டக் அவுட்டாகி நடையை கட்டினார்.
இதனால் மும்பை அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் சிந்தாந்த் - ஷாம்ஸ் முலானி இருவரும் சில மணி நேரம் தோல்வியை தவிர்க்க போராடினர். ஆனால் சாய் கிஷோர் சிந்தாந்த் விக்கெட்டை வீழ்த்த, அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய ஷாம்ஸ் முலானி 68 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
நேற்று காயம் காரணமாக ஓய்வறைக்கு சென்ற சூர்யகுமார் யாதவ் 4வது நாளில் பேட்டிங் செய்ய வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை அணி 223 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த போது ஆட்டம் முடிவுக்கு வந்தது. கடைசி வரை சூர்யகுமார் பேட்டிங் செய்யவே வரவில்லை. தமிழக வீரர்கள் சாய் கிஷோர் மற்றும் அச்யுத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலமாக புச்சி பாபு தொடரின் அரையிறுதி சுற்றுக்கு டிஎன்சிஏ லெவன் அணி முன்னேறி அசத்தியுள்ளது.