திருநெல்வேலி : சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - கோவை கிங்ஸ் இடையே ஆன லீக் போட்டியில் சேப்பாக் அணி எளிதாக வெற்றி பெற்றது.
கோவை கிங்ஸ் அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது. பந்துவீச்சிலும் அந்த அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சேப்பாக் அணி இந்தப் போட்டியில் எந்த வகையிலும் சிரமப்படாமல் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், அந்த முடிவு அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது. துவக்க வீரர்கள் ஷாரூக்கான் 22 ரன்களும், முகுந்த் 22 ரன்களும் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 45 ரன்கள் சேர்த்தனர். இது நல்ல துவக்கம் தான் என்றாலும், இருவரும் ஓவருக்கு ஆறு ரன்கள் என்ற அளவில் ரன் எடுத்தனர்.
அது அதன் பின் வந்த வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. அடுத்து வந்தவர்களில் அனிருத் 15, ரஞ்சன் பால் 17, அகில் ஸ்ரீநாத் 18 ரன்கள் எடுத்தனர். பிற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்கள் எடுத்து வெளியேறினர்.
20 ஓவர்களில் கோவை அணி 9 விக்கெட்கள் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் அணியின் பந்துவீச்சில் பெரியசாமி 2, முருகன் அஸ்வின் 2, ஹரிஷ் குமார் 4 விக்கெட்களும் வீழ்த்தினர்.
அடுத்து சேஸிங் செய்ய வந்த சேப்பாக் அணிக்கு கங்கா ஸ்ரீதர் - கோபிநாத் இணைந்து அபார துவக்கம் அளித்தனர். கங்கா நிதான ஆட்டம் ஆட கோபிநாத் மரண அடி அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 106 ரன்கள் சேர்த்தது. கங்கா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கோபிநாத் 41 பந்துகளில் 82 ரன்கள் குவித்து வெறியாட்டம் ஆடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 10 ஃபோர், 4 சிக்ஸர்கள் விளாசினார். 13.3 ஓவர்களில் சேப்பாக் அணி வெற்றி இலக்கை எட்டியது. 9 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 4 விக்கெட்கள் வீழ்த்திய ஹரிஷ் குமார் ஆட்டநாயகன் விருது வென்றார்.