நத்தம் : 2019 டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
சேப்பாக் அணியின் ஹரிஷ் குமார் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் கலக்கல் ஆட்டம் ஆடி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
காஞ்சி வீரன்ஸ் அணி பந்துவீச்சில் கூட ஒரு சில ஓவர்களில் மட்டுமே ரன்களை வாரி இறைத்து இருந்தது. ஆனால், பேட்டிங்கில் அந்த அணியின் மிகவும் மோசமாக இருந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர் கோபிநாத் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் கங்கா ஸ்ரீதர் 27, சசிதேவ் 41 ரன்கள் எடுத்தனர். காந்தி 50, ஹரிஷ் குமார் 53 அதிரடியாக ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அசத்தினர்.
ஹரிஷ் குமார் 20 பந்துகளில் 53 ரன்கள் குவித்து வாயைப் பிளக்க வைத்தார். அவரது பேட்டிங்கில் ஆறு சிக்ஸர்கள், ஒரு ஃபோர் அடித்தார். சேப்பாக் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழந்து 191 ரன்கள் எடுத்தது.
சவாலான இலக்கை நோக்கி ஆடத் துவங்கிய காஞ்சி அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சதீஷ் 26 பந்துகளில் 44 ரங்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். மற்ற பேட்ஸ்மேன்களில் லோகேஷ்வர் மட்டுமே 20 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் 20 ரன்களுக்கும் குறைவாக எடுத்து அணியை கை விட்டனர்.
19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து காஞ்சி அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. சேப்பாக் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்கு வெற்றிகளுடன் முதல் இடத்தை பிடித்தது.
ஹரிஷ் குமார் அதிரடி பேட்டிங்கில் அசத்தியது போல பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். ஆட்டநாயகன் விருதையும் ஹரிஷ் குமார் தட்டிச் சென்றார்.