நத்தம் : 2019 டிஎன்பிஎல் தொடரின் 7வது போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியது.
காஞ்சி வீரன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சஞ்சய் யாதவ் அசத்தல் ஆட்டம் ஆடி தன் அணியை இமாலாய ஸ்கோரை எட்ட காரணமாக இருந்தார்.

காரைக்குடி அணியின் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டும் என்ன ஆனது என கண்ணுக்கே தெரியவில்லை என்ற அளவில் தான் இருந்தது.
இந்தப் போட்டியில் காரைக்குடி அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரில் காஞ்சி அணியின் துவக்க வீரர் முகிலேஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த சஞ்சய் யாதவ் வெளுத்து வாங்கினார்.
அவருக்கு துவக்க வீரர் விஷால் 27ம பாபா அபாரஜித் 19 ரன்கள் எடுத்து ஒத்துழைப்பு அளித்து ஆடினர். கடைசி ஓவரின் முதல் பந்தில் சஞ்சய் யாதவ் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவர்களில் சதீஷ் அடித்து ஆடி 14 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார்.
காஞ்சி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. காரைக்குடி அணியில் ஆறு பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். குறைந்தபட்சம் ஓவருக்கு 7 ரன்கள் துவங்கி, 10.66 ரன்கள் வரை கொடுத்து பெருந்தன்மையுடன் நடந்து கொண்டனர். சாம் 2, லக்ஷ்மன் 1, மோகன் பிரசாத் 1 விக்கெட் வீழ்த்தினர்.
சவாலான இலக்கான 178 ரன்களை துரத்தத் துவங்கிய காரைக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தார் அந்த அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தா. அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின் ஒருவரும் சொல்லிக் கொள்ளும் படி ஆடவில்லை.
சூர்யபிரகாஷ் 12, ஷாஜஹான் 12 ரன்கள் எடுத்தனர். இது தான் அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் அதிகபட்ச ஸ்கோர். மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள். 14.4 ஓவர்களில் காரைக்குடி அணி 67 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 110 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது காஞ்சி வீரன்ஸ்.
இந்த போட்டி நடைபெற்ற அதே நாளில் இங்கிலாந்து - அயர்லாந்து டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் உலகக்கோப்பை வென்ற சாம்பியன் அணியான இங்கிலாந்து வெறும் 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. அதே போல, இருந்தது காரைக்குடி அணியின் பேட்டிங். இந்த இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் ,மூன்று பேட்ஸ்மேன்கள் டக் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.