திருநெல்வேலி : 2019 டிஎன்பிஎல் தொடரில் காரைக்குடி காளை அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்.
இரண்டு அணிகளுமே மோசமாக பேட்டிங் செய்தன. அதற்கு பிட்ச்சும் ஒரு முக்கிய காரணம். முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 15 ரன்களை தொடவில்லை.
காரைக்குடி அணி நிர்ணயித்த மிகக் குறைவான இலக்கை எட்டவே தடுமாறியது மதுரை பாந்தர்ஸ். ஒரு வழியாக 19வது ஓவர் வரை போட்டியை இழுத்துச் சென்று முடித்தது அந்த அணி.
இந்தப் போட்டியில் காரைக்குடி அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் ஆதித்யா 14, அனிருத்தா 13 ரன்கள் எடுத்தனர். அடுத்து வந்த வீரர்களும் வரிசையாக சொதப்பினர். கணேஷ் 14, அஸ்வின் பாலாஜி 11 ரன்கள் எடுத்ததே அடுத்த இரட்டை இலக்க ஸ்கோர் ஆகும்.
காரைக்குடி காளை அணி 20 ஓவர்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மதுரை அணியின் ரஹில் ஷா 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். கிரண் ஆகாஷ் 3 விக்கெட்களும், செல்வா குமாரன் 2, மிதுன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்,
94 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் துவங்கியது மதுரை அணி. துவக்க வீரர் அருண் கார்த்திக் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த நீலேஷ்-உம் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். ரன் ஏதும் எடுக்காமல் 2 விக்கெட்களை இழந்தது மதுரை அணி.
சரத் ராஜ் 14, சந்திரன் 25 ரன்கள் எடுத்தனர். எனினும், அடுத்த பேட்ஸ்மேன்களான கௌஷிக் 5, பிரமோத் 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். 11.2 ஓவர்களில் 65 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்தது மதுரை.
அதை அடுத்து ரன் வேகம் வெகுவாக குறைந்தது. செல்வ குமாரன் 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 10வது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கிய கிரண் ஆகாஷ் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
18.1 ஓவரில் மதுரை அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி அணியை வீழ்த்தியது.