திருநெல்வேலி : 2019 டிஎன்பிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாம் தகுதிப் போட்டிக்கு முன்னேறியது மதுரை பாந்தர்ஸ் அணி.
இந்தப் போட்டியில் நல்ல ஸ்கோர் அடித்தும், அதை வைத்து வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தது காஞ்சி வீரன்ஸ் அணி. மதுரை பாந்தர்ஸ் அணி கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்று வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற காஞ்சி வீரன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் சஞ்சய் யாதவ் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவர் 52 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார். கடைசி நேரத்தில் ஹரிஹரன் 25 ரன்கள் குவித்தார்.
மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் 20 ஓவர்களில் 151 ரன்களை எட்டியது காஞ்சி வீரன்ஸ் அணி. 11வது ஓவருக்குள் 60 ரன்களுக்கு 5 விக்கெட்களை அள்ளிய மதுரை அணி அதன் பின் கோட்டை விட்டது. அதனால், 152 என்ற சற்றே கடின இலக்கை நோக்கி ஆட வேண்டிய நிலைக்கு சென்றது மதுரை.
மதுரை அணிக்கு துவக்க வீரர் அருண் கார்த்திக் கை கொடுத்தார். அதிரடி துவக்கம் அளித்த அவர் 39 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். சரத் ராஜ் 2, நிலேஷ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினர். சந்திரன் 21, ஆகாஷ் 10 ரன்கள் எடுத்தனர்
கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கௌஷிக், அபிஷேக் தன்வார் பேட்டிங் செய்து வந்தனர். 19வது ஓவரில் தன்வார் ஒரு சிக்ஸ் அடிக்க அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது.
கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், கௌஷிக் ஒரு ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி 3 பந்துகளில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி இரண்டு பந்துகளில் ஒவ்வொரு ரன்னாக எடுத்து வெற்றி பெற்றது மதுரை அணி.
காஞ்சி வீரன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் கிடைத்த அதிர்ஷ்டம், பந்துவீச்சில் கிடைக்கவில்லை. அதனால், அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மதுரை அணி இரண்டாம் தகுதிப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சந்திக்க உள்ளது.