திருநெல்வேலி : 2019 டிஎன்பிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது காஞ்சி வீரன்ஸ் அணி.
காஞ்சி வீரன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் இடையே ஆன லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று, நெட் ரன் ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் இருக்கும் கோவை கிங்ஸ் அணியை முந்தி பிளே-ஆஃப் செல்லலாம் என்ற சிக்கலான சூழ்நிலையில் இருந்தது காஞ்சி அணி.
இந்தப் போட்டியில் திருச்சி வாரியர்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் முகுந்த் 32, ஆதித்யா கணேஷ் 43 ரன்கள் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது திருச்சி அணி. திருநெல்வேலி பிட்ச்சில் இது கடினமான இலக்காகவே கருதப்பட்டது. சேஸிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது.
ரன் ரேட் குறைவாக இருந்தாலும் விக்கெட்கள் வீழ்ச்சி அடையாமல் பார்த்துக் கொண்டது அந்த அணி. துவக்க வீரர் விஷால் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுகேந்திரன் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அடுத்து துவக்க வீரர் லோகேஷ்வர் - பாபா அபாரஜித் கூட்டணி சேர்த்து அணியை மீட்டனர். லோகேஷ்வர் 40 ரன்கள் எடுத்தார். அபாரஜித் கடைசி சில ஓவர்களில் அதிரடி காட்டி அணியை 19.1 ஓவரில் வெற்றி அடையச் செய்தார், அவர் சரியாக 50 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
காஞ்சி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நான்காம் இடம் பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.