நத்தம் : 2019 டிஎன்பிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் காரைக்குடி காளை அணியை அபாரமாக வீழ்த்தியது.
முதலில் சராசரியாக பேட்டிங் செய்யத் துவங்கிய தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு கடைசி பத்து ஓவர்களில் பெரிய ஏற்றத்தை கொடுத்தார் சுப்ரமணிய சிவா.

சேஸிங்கில் காரைக்குடி அணி மண்ணைக் கவ்வியது. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறும் என சொல்ல முடியாத அளவு தான் இருந்தது காரைக்குடி அணியின் சேஸிங்.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் ஸ்ரீனிவாசன் 9, கமலேஷ் 2, அபிஷேக் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அணியை கை விட்டனர்.
ராஜகோபால் 34 ரன்கள் எடுத்து அணியை கரை சேர்க்க போராடினார். அதன் பின் வெங்கடேஷ் உடன் ஜோடி சேர்ந்த சுப்ரமணிய சிவா, தானே ஒட்டு மொத்த பேட்டிங்கையும் கையில் எடுத்துக் கொண்டார். கடைசி 59 பந்துகளில் 40 பந்துகளை சந்தித்த அவர், 87 ரன்கள் குவித்து காரைக்குடி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

தூத்துக்குடி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து 175 ரன்கள் குவித்தது. காரைக்குடி அணியின் சாம் 4 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்து இருந்தனர்.
அடுத்து சேஸிங் செய்த காரைக்குடி அணிக்கு கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருத்தா 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். சூர்யப்ரகாஷ் 30 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர்.
லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன் அஸ்வின் குமார் 14 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். எனினும், காரைக்குடி அணியின் வெற்றி அப்போது எட்டாக் கனியாக இருந்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 118 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது காரைக்குடி காளை.

பேட்டிங்கில் வெளுத்துக் கட்டிய தூத்துக்குடி அணியின் சுப்ரமணிய சிவா ஆட்டநாயகன் விருதை வென்றார். காரைக்குடி அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளை சந்தித்துள்ளது.