திண்டுக்கல்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கோவை அணி சாய் சுதர்சனின் அதிரடி ஆட்டத்தால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரின் 9வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கோவை அணி களமிறங்கியது. சென்னை அணி ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றதால், இந்தப் போட்டியில் வெற்றிபெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் ஷாரூக் கான் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி தொடக்கம் முதலே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. இளம் நட்சத்திர வீரரான பிரதோஷ் பால் 6 ரன்களிலும், கேப்டன் ஜெகதீசன் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து வந்த சந்தோஷ் 14 ரன்களிலும், அபராஜித் 12 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சஞ்சய் யாதவ் 2 ரன்களிலும் வெளியேறினார். இதனால் சென்னை அணி 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த சசிதேவ் - ஹரீஷ் குமார் கூட்டணி சிறிது நேரம் அதிரடியாக ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஹரீஷ் குமார் 20 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சசிதேவ் 23 ரன்கள் வீழ்ந்தார். இறுதியாக சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே சேர்த்தது. கோவை அணி சார்பாக யுதீஸ்வரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் எளிய இலக்குடன் களமிறங்கிய கோவை அணிக்கு சச்சின் - சுரேஷ் குமார் தொடக்கம் கொடுத்தனர். இதில் சச்சின் 14 ரன்களில் ஆட்டமிழக்க, சுரேஷ் குமார் - சாய் சுதர்சன் ஜோடி இணைந்தது. சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் இருவரும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினர். சிறப்பாக ஆடிய சுரேஷ் குமார் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதன்பின்னர் மறுமுனையில் நின்றிருந்த சாய் சுதர்சன் ஹாட்ரிக் பவுண்டரியை விளாசி அரைசதம் கடந்து அசத்தினார். டிஎன்பிஎல் தொடரில் சாய் சுதர்சன் விளாசும் ஹாட்ரிக் அரைசதம் இதுவாகும். இறுதியாக 16.3 ஓவர்களில் இலக்கை எட்டிய கோவை அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் டிஎன்பிஎல் தொடரில் சென்னை அணி முதல் தோல்வியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.