டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நெல்லை அணி நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 8 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக பாபா அபரஜித் மட்டும் 51 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அதோடு இந்த சீஸனில் தனது இரண்டாவது அரைசதத்தையும் இன்றையப் போட்டியில் பதிவு செய்தார்.
அவருக்கு அடுத்தபடியாக ஆல் ரவுண்டர் ஹரிஷ் குமார் 20 ரன்கள் எடுக்க, மற்ற முக்கிய பேட்டர்களான பிரதோஷ் ரஞ்சன் பால்(2), நாராயண் ஜெகதீசன் (15) மற்றும் சஞ்சய் யாதவ் (15) ஆகியோர் பெரிய ஸ்கோரை எடுக்க முடியாமல் தங்களின் விக்கெட்களை இழந்தனர்.

இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் இந்த சீஸனில் 4வது வெற்றியைப் பதிவு செய்யலாம் என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அந்த அணியின் ஓப்பனரும் கேப்டனுமான கே.பி அருண் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதோடு டி.என்.பி.எல் 2023 தொடரில் அருண் கார்த்திக் தனது முதல் அரைசதத்தை 25 பந்துகளில் அடித்து இந்த சீஸனின் அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார். முதல் விக்கெட்டிற்கு கே.பி அருண் கார்த்திக் மற்றும் ஸ்ரீ நிரஞ்சன் இணைந்து 79 ரன்கள் சேர்க்க, நிதானமாக விளையாடி வந்த ஸ்ரீ நிரஞ்சன் 24 ரன்களில் தனது விக்கெட்டை சிலம்பரசனிடம் இழந்தார்.
அருண் கார்த்திக் உடன் அடுத்ததாக களமிறங்கிய ரித்திக் ஈஸ்வரனும் தனது தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நெல்லை ராயல் கிங்ஸை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றார். சிறப்பாக விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் கேப்டன் கே.பி அருண் கார்த்திக் 61 பந்துகளில் இந்த சீஸனில் முதன்முறையாக தனது சதத்தை பதிவு செய்தார். இதில் 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். இதன் மூலம் நெல்லை அணி நடப்பு சீசனில் 4வது வெற்றியை பதிவு செய்தது.