கோவை : டிஎன்பிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்கு எதிராக நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 55 பந்துகளில் 88 ரன்கள் அடித்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார்.
அவருக்கு உறுதுணையாக ஓப்பனிங்கில் கேப்டன் நாராயண் ஜெகதீசன் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க இறுதிவரை ஆட்டமிழக்காமல் சஞ்சய் யாதவ் வெறும் 12 பந்துகளில் 31*ரன்கள் எடுத்தார். சேலம் ஸ்பார்ட்டன்ஸின் பெளலிங்கைப் பொறுத்தவரை சன்னி சந்து சிறப்பாக பந்துவீசி 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார். இதில் கடைசி பந்தை வீசிய அபிஷேக் தன்வர் தொடர்ந்து நோ பால்களை வீசியதால் ஒரே பந்தில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டது.

சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 20 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது. ஆரம்பம் முதலே சேப்பாக் சூப்பர் கில்லீஸின் கச்சிதமான பந்துவீச்சால் திணறிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் பேட்டர்கள் ரன் குவிக்க முடியாமல் மிகவும் தடுமாறினர்.
ஹரீஷ் குமாரின் வேகத்தில் ஓப்பனர் அமித் சாத்விக் வெறும் 6 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க எஸ் அர்விந்த்(17 ரன்கள்) மற்றும் ஆகாஷ் சும்ரா(24 ரன்கள்) விக்கெட்களை சேப்பாக் சூப்பர் கில்லீஸின் பாபா அபரஜித் எடுத்து அவர்களின் ரன் வேகத்தை பின்னுக்கு தள்ளினார்.
டி.என்.பி.எல் தொடரின் வெற்றிகரமான ஓப்பனரான கெளஷிக் காந்தி இந்த சீஸனில் சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்காக மிடில் ஆர்டரில் களம் வர அதற்குள் அந்த அணி தங்களின் முக்கிய விக்கெட்களை இழந்து தத்தளித்தது. மோகித் ஹரிஹரன் (14 ரன்கள்) மற்றும் மான் பாஃப்னா (8) ஆகியோரின் விக்கெட்களை ராக்கி பாஸ்கர் எடுக்க கிட்டத்தட்ட சேலம் ஸ்பார்ட்டன்ஸ் தோல்வியின் பாதைக்கு சென்று கொண்டிருந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கில் சில கேட்ச்சுகளை தவறவிட்டாலும் அவர்களின் அனுபவம் வாய்ந்த பெளலிங் யூனிட் தொடர்ந்து எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து அவர்களின் விக்கெட்களை சீரான இடைவெளியில் எடுத்துக் கொண்டே இருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெளஷிக் காந்தி 23 ரன்களில் சிலம்பரசன் சுழலில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 8வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சன்னி சந்து (19 ரன்கள்) மற்றும் அத்நான் கான் இணைந்து அதிரடியாக ரன் குவித்தனர். அதில் ரோஹித் வீசிய 19வது ஓவரில் அத்நான் கான் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு கோவை மக்களை அரங்கத்தில் கொண்டாடச் செய்தார்.
சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்கு அதிகபட்சமாக பேட்டிங்கில் அத்நான் கான் வெறும் 15 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி இந்த சீஸனை வெற்றியுடன் தொடங்கியது.