திண்டுக்கல் : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதிய ஆட்டம் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் முடிந்தது.
இந்த சீஸனில் தொடர்ச்சியாக 2 வெற்றிகளுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முந்தையப் போட்டியில் அடைந்த தோல்வியுடனும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கினர்.
இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. ஓப்பனர்கள் ராகுல் (9 பந்துகள் 20 ரன்கள்) மற்றும் ஷிவம் சிங்(16 பந்துகள் 21 ரன்கள்) நல்ல தொடக்கம் கொடுத்தாலும் சேப்பாக் சூப்பர் கில்லீஸின் நெருக்கடியான பந்துவீச்சில் திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து தவித்தது.
முதல் பாதியில் தங்களின் முக்கிய பேட்டர்களை இழந்தாலும் அனுபவ வீரர் ஆதித்யா கணேஷ் 30 பந்துகளில் 44 ரன்கள், இளம் வீரர் சரத் குமார் 25 ரன்கள் மற்றும் இறுதிக்கட்டத்தில் சுபோத் குமார் பாட்டீ வெறும் 13 பந்துகளில் 31 ரன்கள் விளாச திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களைக் குவித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் பெளலிங்கில் அதிகபட்சமாக ராஹில் ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து களமிறகிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க சந்தோஷ் சிவ் வெறும் 1 ரன்னில் அருண் குமார் வேகத்தில் ஆட்டமிழக்க, அடுத்ததாக இம்பாக்ட் வீரராக களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால்(6) விக்கெட்டை சரவண குமார் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு அதிர்ச்சியளித்தார்.
கடினமான இலக்கை சேஸ் செய்ய கேப்டன் நாராயண் ஜெகதீசன் மற்றும் அனுபவ வீரர் பாபா அபரஜித் இணைந்து 3வது விக்கெட்டிற்கு அதிரடியாக விளையாடி 72 ரன்கள் சேர்த்தனர்.
நிதானமாக விளையாடி வந்த நாராயண் ஜெகதீசன் 37 ரன்களில் தனது விக்கெட்டை நட்சத்திர வீரர் வருண் சக்கரவர்த்தியிடம் இழக்க, சிறிது நேரத்திலேயே அதிரடி வீரர் சஞ்சய் யாதவும் வருண் சக்கரவர்த்தியின் பெளலிங்கில் ரவிச்சந்திரன் அஷ்வினின் அற்புதமான கேட்ச்சால் பெவிலியன் திரும்பினார்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸின் முக்கிய பேட்டர்கள் தங்களது விக்கெட்களை இழந்தாலும் பாபா அபரஜித் தனி ஒருவனாக போராடி இந்த சீஸனில் தனது முதல் அரைசதத்தை 30 பந்துகளில் பதிவு செய்தார்.கடைசி 3 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு ஒரே நம்பிக்கையாக அந்த அணியின் பாபா அபரஜித் களத்தில் இருக்க திண்டுக்கல் டிராகன்ஸின் சிறந்த பெளலரான வருண் சக்கரவர்த்தி பந்துவீசினார்.
அந்த ஒரே ஓவரில் பாபா அபரஜித் 2 சிக்ஸர்களை விளாச சேப்பாக் சூப்பர் கில்லீஸிற்கு பெரிய நம்பிக்கைப் பிறக்க எதிர்பாராதவிதமாக 3வது சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் பாபா அபரஜித் 40 பந்துகள் 74 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். மேலும் அந்த விக்கெட்டை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி இந்த சீஸனின் பர்ப்பிள் கேப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.
பரபரப்பான சென்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட அந்த அணி இறுதியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. 1 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றிப் பெற்று இந்த சீஸனில் தொடர்ச்சியாக தங்களின் 3வது வெற்றியைப் பதிவு செய்தது. அதோடு 4 வருடங்களுக்குப்பின் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் தற்போதைய புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.