திருநெல்வேலி: சேலம் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றதன் மூலம், பிளே ஆஃப் சுற்றின் குவாலிஃபயர் போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது.
டிஎன்பிஎல் தொடரின் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்த்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் பாபா இந்திரஜித் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய சேலம் அணியில் தொடக்க வீரர்கள் கவுசிக் காந்தி 7 ரன்களிலும், அரவிந்த் 26 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய கவின் 25 ரன்கள், மோகித் ஹரிஹரன் 21 ரன்கள் சேர்த்தனர். இதன்பின்னர் வந்து அதிரடியாக ஆடிய சன்னி சந்து 39 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் விளாசி அசத்தினார்.
இவரின் அதிரடி காரணமாக சேலம் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்தது. திண்டுக்கல் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, சுபோத் பதி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் திண்டுக்கல் அணி பேட்டிங்கை தொடங்கியது.
அந்த அணி சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சிவம் சிங் 8 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த விமல் குமார் - கேப்டன் பாபா இந்திரஜித் ன் கூட்டணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விமல் குமார் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஆதித்யா கணேஷ் 13 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது ஒருபக்கம் இருக்க, சிறப்பாக ஆடிய பாபா இந்திரஜித் 50 பந்துகளில் 3 சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்ததுடன், அணியை வெற்றிபெற செய்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் குவலிஃபையர் 1 போட்டிக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. அந்தப் போட்டியில் ஷாரூக் கான் தலைமையிலான கோவை லைகா கிங்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிர்கொள்ள உள்ளது.