திண்டுக்கல் : டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பால்சி திருச்சி அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது,
ஓப்பனர்களாக பால்சி திருச்சியின் கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜு(6) மற்றும் ஜாஃபர் ஜமால்(0) ஆகிய இருவரும் பவர்ப்ளேவிற்குள்ளாகவே தங்களின் விக்கெட்டை இழந்தனர். அடுத்ததாக வந்த மற்ற பேட்டர்களும் பெரியளவில் சோபிக்காமல் தங்களின் விக்கெட்களை பறிகொடுக்க பால்சி திருச்சியிலுள்ள அனுபவ வீரர் மணிபாரதி மட்டும் அதிகபட்சமாக 33 பந்துகளில் 40 எடுத்து ஆறுதல் தந்தார்.

மணிபாரதிக்கு அடுத்தபடியாக, அந்த அணியின் டாரல் பெராரியோ 16 பந்துகளில் 29 ரன்கள் எடுக்க பால்சி திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. சேலம் ஸ்பார்ட்டன்ஸைப் பொறுத்தவரை பெளலிங்கில் அந்த அணியின் கேப்டன் அபிஷேக் தன்வார் அட்டகாசமாக பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அவருக்கு துணையாக சன்னி சந்து மற்றும் ராஜேந்திரன் கார்த்திகேயன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது. அந்த அணியின் ஓப்பனர்கள் ஆகாஷ் சும்ரா (10) மற்றும் அமித் சாத்விக் (22) பவர்ப்ளேவிற்குள்ளாகவே தங்களது விக்கெட்களை இழந்தனர். வந்தவுடன் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசிய மான் கே பாஃப்னா 16 ரன்களில் காட்சன் பந்துவீச்சில் ஃப்ரான்சிஸ் ரோகின்ஸின் அசத்தலாக கேட்ச் மூலம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
மிடில் ஆர்டரில் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸின் கெளஷிக் காந்தி தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் 1500 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை இந்தப்போட்டியில் பதிவு செய்தார்.
கெளஷிக் காந்தி இதற்கு முந்தைய சீஸன்களில் ஓப்பனராக களமிறங்கி வந்த நிலையில் இந்த சீஸனில் சேலம் ஸ்பார்ட்டன்ஸிற்கு மிடில் ஆர்டரில் களமிறங்கியுள்ளார்.

அவருடன் ஜோடி சேர்ந்த மோகித் ஹரிஹரன் 15 ரன்கள் எடுத்து காட்சன் சுழலில் தனது விக்கெட்டை இழந்தாலும், தனி ஒருவனாக போராடி கெளஷிக் காந்தி இந்த சீஸனில் தனது முதல் அரைசதத்தை 31 பந்துகளில் பதிவு செய்தார். அதிலும் குறிப்பாக ஆண்டனி தாஸின் பெளலிங்கில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு சேலம் ஸ்பார்ட்டன்ஸின் வெற்றியை உறுதி செய்தார்.
சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 28 பந்துகள் மீதமுள்ள நிலையில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பால்சி திருச்சியை அணியை வீழ்த்தி இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. மறுமுனையில் பால்சி திருச்சி இந்த சீஸனில் தொடர்ச்சியாக தங்களின் இரண்டாவது தோல்வியைப் பெற்றது. அந்த அணியின் பெளலிங்கைப் பொறுத்தவரை புதுமுக வீரர் ஜி காட்சன் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆறுதல் அளித்தார்.