சேலம் : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 தொடரின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை அணியும், திண்டுக்கல் அணியும் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய லைகா கோவை கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. கோவை அணி சார்பில் அதிகபட்சமாக பி சச்சின் 46 பந்துகளில் 70 ரன்கள் குவிக்க, அவருக்கு துணையாக யூ முகிலேஷ் 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் டிராகன்ஸின் பெளலிங்கில் அதிகபட்சமாக சுபோத் குமார் பாட்டீ 4 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தினார்.

இறுதிப்போட்டிக்குள் நுழைய திண்டுக்கல் டிராகன்ஸிற்கு 20 ஓவர்களில் 194 ரன்கள் என்ற கடினமான இலக்கை லைகா கோவை கிங்ஸ் நிர்ணயிக்க, 2வது இன்னிங்ஸை தொடங்கிய திண்டுக்கல் முதல் ஓவரிலேயே கெளதம் தாமரை கண்ணனின் வேகத்தில் விமல் குமார்(1) விக்கெட்டை இழந்து அதிர்ச்சிக்குள்ளானது.
தொடர்ச்சியாக கோவை அணியின் அபாரமான பந்துவீச்சில் திண்டுக்கல் பேட்டர்கள் ரன் எடுக்க முடியாமல் பவர்ப்ளேவில் திணறினர். இந்த சீஸனில் திண்டுக்கல் டிராகன்ஸிற்காக அதிக ரன்களைக் குவித்த தொடக்க வீரர் ஷிவம் சிங் வெறும் 10 ரன்களில் ஷாரூக் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பூபதி குமாரும் 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஜாதவேத் சுப்ரமணியனின் அற்புதமான சுழலில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்
திண்டுக்கல் டிராகன்ஸ் தங்களின் டாப் பேட்டர்களின் விக்கெட்களை சீரான இடைவெளியில் பறிகொடுக்க திண்டுக்கல் வெற்றிக்கான ரன் ரேட் கடுமையாக உயரத் தொடங்கியது. இந்த சீஸனில் அந்த அணிக்காக மிடில் ஆர்டரில் அசத்திய ஆதித்யா கணேஷ் வெறும் 5 ரன்களில் ஆட்டமிழக்க, அதே ஓவரில் ஜி கிஷோரும் தனது விக்கெட்டை இழக்க திண்டுக்கல் கடும் பின்னடைவை சந்தித்தது.
கேப்டன் பாபா இந்திரஜித் (21) மற்றும் சுபோத் பாட்டீ (14) ஆகிய அதிரடி வீரர்களும் முக்கியக் கட்டத்தில் தங்களின் விக்கெட்டை பறிகொடுக்க கிட்டத்தட்ட திண்டுக்கல் டிராகன்ஸ் தோல்வியின் விளிம்பில் சென்றது. ஆனால், முக்கியத் தருணத்தில் திண்டுக்கல்லின் ஆஷிக் ஸ்ரீனிவாஸிற்குப் பதிலாக இம்பாக்ட் வீரராக களமிறங்கிய சரத் குமார் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றினார்
சரத் குமார் அதிரடியாக விளையாடி வெறும் 18 பந்துகளில் இந்த சீஸனின் அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்து இதற்கு முன் லைகா கோவை கிங்ஸின் ஷாரூக் கான்(20) அடித்த சாதனையை முதல் குவாலிஃபையரில் முறியடித்தார். மேலும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் அதிவேக அரைசதமடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
ஒரு கட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றிக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையிலிருந்து கடைசி 2 ஓவர்களில் 46 ரன்கள் அடித்தால் வெற்றிபெறலாம் என்ற நிலைக்கு அந்த அணியைக் கொண்டு வந்தார்.
இறுதியில் லைகா கோவை கிங்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி இந்த சீஸனின் இறுதிப்போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் இந்தப் போட்டியில் தோற்றாலும் எலிமினேட்டரில் வெற்றி பெறும் அணியிடன் குவாலிஃபையர் 2ல் விளையாடும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.
திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் அதிகபட்சமாக சரத் குமார் வெறும் 25 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். லைகா கோவை கிங்ஸைப் பொறுத்தவரை பெளலிங்கில் அவர்களின் அனுபவ வீரர் எம் முகமது சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.