நெல்லை : தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீசனின் குவாலிஃபையர் 2ல் திண்டுக்கல் அணியும் நெல்லை ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. நெல்லையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களைக் குவித்தது. திண்டுக்கல் சார்பில் அதிகபட்சமாக ஷிவம் சிங் 46 பந்துகளில் 76 ரன்கள் குவிக்க, நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

நெல்லை ராயல் சிங்ஸ் இந்தப் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைய அந்த அணிக்கு 20 ஓவர்களில் 186 ரன்கள் என்ற கடினமான இலக்கை திண்டுக்கல் டிராகன்ஸ் நிர்ணயித்தது.
நெல்லை ராயல் கிங்ஸிற்கு தொடக்க வீரர்களாக கேப்டன் அருண் கார்த்திக் மற்றும் இம்பாக்ட் வீரர் பி சுகேந்திரன் களமிறங்க, ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.பி அருண் கார்த்திக் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆஷிக் ஸ்ரீனிவாஸின் சுழலில் சிக்கி வெளியேற, மறுமுனையில் சுகேந்திரன் மிகுந்த தடுமாற்றத்துடன் விளையாடி 24 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து வருண் சக்கரவர்த்தியிடம் ஆட்டமிழந்தார்.
இந்த சீஸனில் நெல்லை ராயல் கிங்ஸிற்காக தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ஜி அஜிதேஷ் இந்த ஆட்டத்திலும் தன் முத்திரையைப் பதித்தார்.ஜி அஜிதேஷ் அதிரடியாக விளையாடி இந்த சீஸனில் தன் 3வது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவருக்கு துணையாக விளையாடிய நிதிஷ் ராஜகோபால் (26 ரன்கள் 27 பந்துகள்) அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணற, தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் முதன்முறையாக ரிட்டையர்டு அவுட் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

ஒரு புறம் அஜிதேஷ் மட்டும் தனி ஒருவனாக போராட, மிகுந்த நெருக்கடியான தருணத்தில் களத்திற்குள் நுழைந்தார் இளம் வீரர் ரித்திக் ஈஸ்வரன். கடைசி 2 ஓவர்களில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜி கிஷோர் வீசிய 19வது ஓவரில் ரித்திக் ஈஸ்வரன் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை தலைகீழாக மாற்றினார்.
அதே ஓவரில் அஜிதேஷும் தன் பங்கிற்கு ஒரு சிக்ஸர் விளாச அந்த ஓரே ஓவரில் நெல்லை ராயல் கிங்ஸ் 33 ரன்கள் எடுக்க கிட்டத்தட்ட அந்த அணி வெற்றிக் கோட்டை எட்டியது.ஒரு கட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி பெறும் என்ற நிலையில், ஜி அஜிதேஷ் மற்றும் ரித்திக் ஈஸ்வரன் இணைந்து 4வது விக்கெட்டிற்கு வெறும் 23 பந்துகளில் 62 ரன்கள் குவித்து நெல்லை ராயல் கிங்ஸின் வெற்றிக்கு வித்திட்டனர். கடைசி ஓவரை சிறப்பாக வீசிய திண்டுக்கல் டிராகன்ஸின் சுபோத் பாட்டீயின் முயற்சியால் ஆட்டம் கடைசிப் பந்து வரை செல்ல, இறுதி பந்தில் ரித்திக் ஈஸ்வரன் சிக்ஸர் அடிக்க நெல்லை ராயல் கிங்ஸ் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது.