சேலம் : தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில், மதுரை அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. ,சீகம் மதுரை பேந்தர்ஸ் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 4/23 என்று தங்களின் குறைந்தபட்ச பவர்ப்ளே ஸ்கோரை இந்த சீஸனில் பதிவு செய்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக அவர்களின் கேப்டன் அபிஷேக் தன்வார் மட்டும் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். அவரைத் தவிர மற்ற எந்த பேட்டரும் 20 ரன்களும் தொடவில்லை. இறுதியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் 19.4 ஓவர்களில் வெறும் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சீகம் மதுரை பேந்தர்ஸ் சார்பில் குர்ஜப்நீத் சிங் சிறப்பாக பந்துவீசி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு துணையாக முருகன் அஷ்வின் மற்றும் வி கெளதம் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். நடப்பு டி.என்.பி.எல் 2023 சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்ய சீகம் மதுரை பேந்தர்ஸிற்கு வெறும் 99 ரன்களே தேவை என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கியது.
ஆரம்பத்திலேயே அந்த அணியின் கேப்டன் சி.ஹரி நிஷாந்த்(0) ரன் எடுக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர், வி ஆதித்யா(8) மற்றும் ஜெ கெளஷிக் (21) ரன்களில் தங்களது விக்கெட்களை பறிகொடுக்க 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்கள் ஶ்ரீ அபிஷேக் (32* ரன்கள் 28 பந்துகள்) மற்றும் ஸ்வப்னில் சிங்(25*ரன்கள் 16 பந்துகள்) இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் சீகம் மதுரை பேந்தர்ஸ் இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்திப் பெற்றது.

இன்றைய போட்டிகள்:
திண்டுக்கல் டிராகன்ஸ் v லைகா கோவை கிங்ஸ்
நேரம்: பிற்பகல் 3 மணிக்கு
ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் v பால்சி திருச்சி
நேரம் : இரவு 7 மணிக்கு